பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு..ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்! தவெகவை வைத்து திமுகவுக்கு செக்?
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் ஏற்கனவே இருக்கும் கூட்டணியோடுதான் திமுக சந்திக்க இருக்கிறது. அதே நேரத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களும், மூத்த தலைவர்களும் பேச ஆரம்பித்திருப்பது கூட்டணிக்குள் லேசான சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயின் தவெக கூட்டணி வாய்ப்பு என்ற பேரத்தைப் பயன்படுத்தி திமுகவிடம் அதிக சீட்டுகளைப் பெறுவதற்கான முயற்சி இது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அடுத்த ஆண்டு அதாவது 2026-ல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன.
கூட்டணியைப் பலப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை அதிமுக, திமுக செய்து வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் என இரு கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

2026 சட்டமன்ற தேர்தல்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் லேசாக சலசலப்பு எழத் தொடங்கி இருக்கிறது. அதாவது திமுகவுடன் பல ஆண்டுகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனக் கோரிக்கையை சில தலைவர்கள் எழுப்பி வருகின்றனர். பல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கை காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நிலையில் இந்தத் தேர்தலில் சற்று அழுத்தமாகவே தங்கள் குரலைப் பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் இது தொடர்பாகப் பேசியிருந்தனர்.
காங்கிரஸ் தலைவர்கள்
இந்நிலையில், சிதம்பரத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான கே.எஸ். அழகிரி," கரூரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்திருப்பது நாகரிகமான செயல் அல்ல. சட்டசபைத் தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகளைக் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு கேட்பதும் எங்களது உரிமை. ஆனால் வேறு கூட்டணியில் சேர்வோம் எனக் கூறுவது வசதிதான். 110 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது குறைந்த இடங்களில் போட்டியிடுகிறது. இந்த நிலை மாற வேண்டும் எனக் கூறியிருந்தார்.
கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரியின் இந்தப் பேச்சை பெரும்பாலான காங்கிரஸ் தொண்டர்களும் மாவட்ட தலைவர்களும் ஏற்றுக்கொள்வது போலவே இருக்கிறது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பெண் காங்கிரஸ் நிர்வாகி ஒருவரை திமுகவில் இணைய வைத்ததும் காங்கிரஸ்-திமுக இடையிலான உறவைப் பிளவுபடுத்துவது போல அமைந்துள்ளது. இதற்கு வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்திருந்தார் காங்கிரஸ் எம்.பி. ஆன ஜோதிமணி. இந்த நிலையில், திமுக கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இல்லை என்றால் தனித்துக்கூட போட்டியிடலாம் எனப் பேசி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
தனுஷ்கோடி ஆதித்தன்
அதை வெளிப்படுத்தும் விதமாகப் பேசியிருந்த பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரான சுரேஷ், "கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக தோல்வியடையும். காங்கிரஸின் வளர்ச்சியைக் காட்ட 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராக இருக்கிறோம்" எனப் பேசியிருந்தார். பேச ஆரம்பித்து வரும் நிலையில் தன் பங்குக்குக் கருத்தைக் கூறியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தனுஷ்கோடி ஆதித்தன்.
தவெக விஜய்
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2026 தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதே நேரத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸும் பங்கு பெறக் கோரிக்கை விடுக்கும்" எனக் கூறியிருந்தார். கீழ்மட்ட நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனக் கேட்டு வந்தாலும், கட்சியின் முக்கிய முகங்களான மூத்த தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை அடுத்தடுத்து பொதுவெளியில் தெரிவித்து வருவது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகாது என்றாலும், தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணி என்ற பேரத்தைப் பயன்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைப் பெறுவதற்கான முயற்சிதான் இது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications