பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு யார் அனுமதி அளித்தது? கருப்பு நாள்.. காங்கிரஸ் எம்பி பேட்டி
சென்னை: மரண தண்டனை விதிக்கப்பட்டு, 31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான பேரறிவாளன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது நீதித்துறையின் கருப்பு நாள் என காங்கிரஸ் எம்பி சுதா கூறியுள்ளார்
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சுதா இன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஏப்ரல் 27 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பின் கருப்பு நாள். முன்னாள் பாரதப்பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்ற எல்டிடி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி பேரறிவாளன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார் இது நீதித்துறையின் கருப்பு நாள் ஆகும்.

யார் அனுமதி அளித்தது
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவித்த பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு யார் அனுமதி அளித்தது? தற்போதுள்ள பார் கவுன்சில் உறுப்பினர்கள் இந்த செயலை செய்துள்ளார்கள் என்றால் அவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
எப்படி அனுமதி அளித்தார்கள்
தற்போது பார் கவுன்சிலுக்கு தேர்தல் நடைபெற்றுள்ள சூழ்நிலையில் அதில் உள்ள உறுப்பினர்களுக்கு வழக்கறிஞர்களை புதிதாக பதிவு செய்வதற்கு எந்தவித உரிமையும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எல்டிடி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பேரறிவாளனுக்கு எப்படி இவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதி அளித்தார்கள்.
பேரறிவாளனின் பதிவை ரத்து செய்ய வேண்டும்
இந்த நிலை நீடித்தால் தீவிரவாதிகளும் குற்றவாளிகளும் எளிதாக வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியும். வழக்கறிஞர் என்ற போர்வையில் தீவிரவாதிகள் ஊடுருவதற்கு எந்த வகையிலும் வழக்கறிஞர்கள் அனுமதிக்க மாட்டோம். மக்களின் குறைகளை எடுத்துச் சொல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் 15 ஆண்டுகளாக சிறந்த வழக்கறிஞராக பணியாற்றிய வருகின்றேன் என்ற அடிப்படையிலும் பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். உடனடியாக பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை ரத்து செய்ய வேண்டும் இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளேன்" இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
பேரறிவாளன் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், 31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தால் 142-வது சிறப்பு அதிகாரத்தால் 2022-ல் விடுதலை செய்யப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.
வழக்கறிஞராக மாறினார்
முன்னதாக விடுதலை செய்யப்பட்ட பின்னர், பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார் பேரறிவாளன். அதில் தீவிர கவனம் செலுத்திய பேரறிவாளன் 2025-ல் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அகில இந்திய பார் தேர்விலும் (AIBE) வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 27) கறுப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்ட பேரறிவாளன், விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்க இருக்கிறார்.
என் கனவு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், நான் ஒரு புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பவில்லை. சட்ட உதவி கிடைக்காமல் சிறையில் வாடும் ஏழை எளிய கைதிகளின் குரலாக ஒலிக்கவே விரும்புகிறேன். ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல, தண்டனைக்குப் பிந்தைய மறுஆய்வுச் சட்டங்கள் இந்தியாவிலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது கனவு" என்றார்.














Click it and Unblock the Notifications