பதவிக்காக பாஜகவை தூக்கிப் பிடிக்கிறார் அண்ணாமலை.. படிப்பதை கெடுக்கும் ஆர்எஸ்எஸ்.. காங்கிரஸ் விளாசல்!
மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பதவிக்காக பாஜகவை தூக்கிப் பிடிக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. அணியின் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிப்பதையோ, மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையோ நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருவதாக ரஞ்சன் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐஐடிக்களில் தொடரும் தற்கொலைகளை தடுக்கத் தவறிய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. அணியின் தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான மும்பை, சென்னை ஐஐடி-களில் தொடரும் மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பட்டியலின பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் சென்னை ஐஐடி வளாகத்தின் முன்பு தீப்பந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தீப்பந்தம் கொளுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தூண்டுதல்
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி அணி தலைவர் ரஞ்சன் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வஞ்சித்து, உயர் சாதி சமூகத்தினர் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளின் தவறுதலான தூண்டுதல்களால் பல்வேறு செயல்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2021 வரை நாடாளுமன்ற அறிக்கையின்படி 122 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதில் 72 மாணவர்கள் பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள்.

இட ஒதுக்கீட்டை நிறுத்த முடியாமல்
அரசியலமைப்பு சட்டத்தின் உரிமைகளைப் பயன்படுத்தி பட்டியலின மக்கள் கஷ்டப்பட்டு படித்து வரும் நிலையில், இது போன்ற வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மாணவர்கள் படிப்பதையோ மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்த முடியாத காரணத்தால் தற்கொலைக்கு தூண்டிவிடும் விதமாக ஆர்எஸ்எஸ், பாஜக செயல்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான அரசு இதனை நிறுத்த வேண்டும், வருங்காலங்களில் இதுபோன்ற செயல் நடைபெறாமல் இருக்கவும் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தற்போது தீப்பந்தம் ஏந்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக போராடி வருகிறோம்.

பதவிக்காக
2024ல் ராகுல் காந்தி தலைமையில் அமையப்போகும் காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு நிரந்தர தீர்வு காண்போம். அனைத்து துறைகளிலும் மோடி அரசால் இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது. மாணவர்களிடம் வன்முறையைத் தூண்டி தவறான எண்ணத்தை விதைக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸின் முயற்சிகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பதவிக்காக பாஜகவை தூக்கிப் பிடிக்கிறார்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications