வடமாநிலங்களுக்கு வாழ்வு.. தென் மாநிலங்களுக்கு தண்டனை.. தயாநிதி மாறன் பேட்டி
சென்னை: சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், "தொகுதி மறுவரையறைச் செய்யப்பட்டால் வட மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துவிடும். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவே உயரும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது தண்டனை வழங்குவது போல் இருக்கிறது. இதனால் நிதிப்பகிர்வு குறையும் மற்றும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் பலவீனமடையும்" என்றார்.
தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத் திருத்த மசோதா தாக்கலுக்காக நாடாளுமன்ற சிறப்பு அமர்வு நாளை தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. பாஜகவின் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று பாஜக டெல்லி மேலிடம் அறிவித்துள்ளது.

ஆனால் இந்த தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் நாளை டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற இருப்பதால், திமுக எம்.பி.க்கள் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11.00 மணியளவில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு பிறகு திமுக தலைமை கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், "Delimitation என்ற பெயரில் சட்டத்திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கிடும் வகையில் ஒன்றிய பாஜக அரசுக் கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்துக்கு எதிராக நாளை தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றுவோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், "தொகுதி மறுவரையறைச் செய்யப்பட்டால் வட மாநிலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிக அளவு உயர்ந்துவிடும். தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவே உயரும். உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் 80-லிருந்து 140 ஆகவும், பீகாரில் 40- லிருந்து 73 ஆகவும் உயரம். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் வெறும் 51 ஆக மட்டுமே மட்டுமே உயரும்
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு இது தண்டனை வழங்குவது போல் இருக்கிறது. இதனால் நிதிப்பகிர்வு குறையும் மற்றும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரல் பலவீனமடையும். தொகுதி மறுவரையறைக்குப் பிறகு தான் பெண்கள் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்பதால் இது உடனடியாகப் பெண்களுக்குப் பயன் தராது. இதுவொரு திசைதிருப்பும் நடவடிக்கையாவே பார்க்கிறோம். மேலும் இந்த நடவடிக்கையைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில் நாளை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். தமிழ்நாடு மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்ற வேண்டும்.
பல்லை பிடுங்கி ஓரம் கட்டப்பட்ட அண்ணாமலை தானும் ஏதோ பேச வேண்டுமென்றுக் கருத்தை கூறி வருகிறார். தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். நமது உரிமையை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமித்ஷா ஆகியோர் பறிக்கிறார்கள். எனவே நாளை நமது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றவேண்டும்" இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.














Click it and Unblock the Notifications