மெட்ரோ ரயிலில் உணவு சாப்பிட தடை.. விதிகளை பின்பற்றுங்கள்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் உணவு உட்கொள்ள பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமூகமான இனிமையான பயணத்தை உறுதி செய்ய விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குடியேறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலும் ஒரு பக்கம் அதிகரிக்க, காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு சென்று வருவோர் திண்டாடி வருகின்றனர்.

இதனால் சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையின் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணத்தை உறுதி செய்வதால், நீண்ட தூரம் பயணிப்பவர்கள் அனைவரும் மெட்ரோ பக்கம் திரும்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் மெட்ரோ ரயிலை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 10.52 கோடியாகும். கடந்த ஆண்டை விடவும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கை இது. இதனால் எதிர்காலத்திலும் மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், மெட்ரோ பயணிகளுக்கு ஒரு நினைவூட்டல்.. இனி சென்னை மெட்ரோ ரயில்களுக்குள் உணவு உட்கொள்ள அனுமதி கிடையாது. அனைத்து பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் இனிமையான பயணத்தை உறுதி செய்வதற்கு, விதிமுறைகளை பின்பற்றவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
A gentle reminder for metro riders: Please follow metro etiquettes to ensure a smooth and pleasant journey for all passengers.#chennaimetro #cmrl #publictransport #commute #travel #metrorail #chennai #metroride #journey pic.twitter.com/K1E1ltKxtN
— Chennai Metro Rail (@cmrlofficial) January 20, 2025
அவசர அவசரமாக பணிக்கு செல்வோர், பள்ளிகளுக்கு செல்வோர் என்று பலரும் டிபன் பாக்ஸில் உணவு எடுத்து கொண்டு பயணத்தின் போது சாப்பிடுவது வழக்கமான விஷயம் தான். ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு பின் என்ன காரணம் என்றும் பயணிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள் பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவும் இந்த அறிவிப்பு பயணிகளிடையே சொல்லப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications