சென்னையில் தீயாய் பரவும் கொரோனா.. கட்டுப்பாடு மண்டலங்கள் கிடுகிடு அதிகரிப்பு.. 70 தெருக்களுக்கு சீல்
சென்னை: சென்னையில் ஊரடங்கு தளர்வால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 70 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா 2வது அலை வீசுகிறதா என்று சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த, மே, ஜூன் மாதங்களில் மிக அதிகமாக இருந்தது. அப்போது 1000த்திற்கும் மேற்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டது.
அதாவது, ஒரு தெருவில் 10க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருந்தால் அது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வந்தது. அந்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் வெளியே போக முடியாதபடியும், வெளியே உள்ள மக்கள் உள்ளே வர முடியாதபடியும், கட்டுப்பாடுகள் இருக்கும்.
ஊரடங்கு நேரத்திலும் ஓடாய் உழைத்தவர்கள்.. கொரோனாவால் தமிழகத்தில் 15 தபால்காரர்கள் பலி
கொரோனா அதிகரிப்பு
சென்னையில் மிக மோசமாக இருந்த கொரோனா, ஊரடங்கு கட்டுப்பாடுகளையடுத்து, பின்னர், படிப்படியாக குறைந்தது. எனவே ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் பத்துக்கும் குறைவாக மாறியது. ஆனால் இப்போது, ஊரடங்கில் நிறைய தளர்வு அளிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து அதிகரித்ததோடு கொரோனா பாதிப்பும் சென்னையில் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை எண்ணம் இல்லை
போக்குவரத்து வசதி செய்த பிறகு மக்கள் எந்த அச்சமுமில்லாமல், பஸ்களில் கூட்டத்தில் பிதுங்கி வழிந்தபடி பயணிக்கிறார்கள். பலரும் முகக் கவசம் அணிவதில்லை. பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காததுமே தொற்று அதிகரிப்புக்கு காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சீல் பகுதிகள்
இந்த நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகிறார்கள். அதிகபட்சம் ஒரு தெருவில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டாலும் சீல் வைக்கப்படுகிறது.
70 தெருக்கள்
கடந்த 6ம் தேதி சென்னையில் மொத்தம் 42 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக அதிகரித்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மணலி மண்டலத்தில் 4 தெருக்களுக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 11 தெருக்களுக்கும், ராயபுரம் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 தெருக்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மண்டலங்கள்
அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளது அம்பத்தூர் மண்டலம். இங்கு, 29 தெருக்களுக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 3 தெருக்கள், தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 தெருக்கள், கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 தெருக்கள், ஆலந்தூர் மண்டலத்தில் 5 தெருக்கள், அடையாறு மண்டலத்தில் 4 தெருக்கள், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 2 தெருக்கள், வளசரவாக்கத்தில் ஒரு தெரு சீல் வைக்கப்பட்டுள்ளது.