நசுங்கி இறந்த ஐடி பெண் ஊழியர்.. சென்னையில் இடிந்த கட்டிடம்! ஒப்பந்ததாரர் கைது - உரிமையாளர் எஸ்கேப்
அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் உயிரிழந்த வழக்கில் கட்டிடத்தை இடிக்கும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்து உள்ளார்கள்
சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் அண்ணா சாலையை ஒட்டி அமைந்து இருந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது சுவர் இடிந்து பெண் ஐடி ஊழியர் உயிரிழந்த நிலையில், கட்டிடத்தை இடிப்பதற்கான பணியில் ஈடுபட்டு இருந்த நிறுவனத்தின் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
சென்னை அண்ணா சாலையை ஒட்டி அமைந்து உள்ள ஆயிரம் விளக்கு மசூதி அருகே பழைய கட்டிடங்களை இடிக்கும் பணி கடந்த 2 நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. அப்போது ஜேசிபி மூலம் பாழடைந்த பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது.
அந்த பணியின்போது ஒரு பகுதி கட்டிட சுவர் இடிந்து அண்ணா சாலை ஓரமாக விழுந்தது. சுவர் விழுந்ததில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் படுகாயமடைந்த. போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் பொதுமக்கள் தொடர்புகொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
அலட்சியம்.. துடிதுடித்து இறந்த பெண் ஐடி ஊழியர்! விதிமீறல் நடந்துள்ளதாக சென்னை மேயர் பிரியா விளக்கம்
உயிரிழந்த பெண்
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த 2 பெண்களையும் 20 நிமிட போராட்டத்துக்கு பின் மீட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மதுரையை சேர்ந்த ஐடி ஊழியர்
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கட்டிட சுவர் இடிந்த விபத்தில் உயிரிழந்த பெண் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரியா என்பது தெரியவந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த அவர் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்து இருக்கிறார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பணிகள் நிறுத்தம்
பழைய கட்டிடத்தை இடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை முறையை பின்பற்றாமல், முன்னச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கட்டிடம் இடிக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
3 பேர் கைது
கட்டிட இடிப்பின்போது சென்னை மாநகராட்சி விதித்து இருக்கும் எந்த விதிமுறைகளையும் அவர்கள் கடைபிடிக்கவில்லை என்று மேயர் பிரியா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஜேசிபி ஓட்டுநர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.
ஒப்பந்ததாரர் கைது
இந்த நிலையில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல், மாநகராட்சி விதிகளை பின்பற்றாமல் கட்டிடத்தை இடித்து பெண் உயிரிழக்க காரணமான ஒப்பந்ததாரர் அப்துல் ரஹ்மானை போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அதேபோல் கட்டிடத்தின் உரிமையாளரான செய்யது அலி ஃபாத்திமா தலைமறைவாக இருப்பதால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.