திமுக குரலை ஒலித்த கார்த்தி சிதம்பரம்.. காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த முரண்பாடுகள்.. 4 பேர் 4 விதமா!?
சென்னை : பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு தீர்ப்பிற்கு காங்கிரஸ் தலைமை வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் எம்.பிக்கள், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ஆகியோர் கட்சித் தலைமைக்கு முரணான கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
உயர் சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளன. இந்த தீர்ப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளன.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த தீர்ப்பை முழுமையாக வரவேற்றுள்ளது. தாங்கள் மேற்கொண்ட பணிகளின் காரணமாகவே இந்த இட ஒதுக்கீடு வந்ததாகவும், பெருமிதம் அடைந்துள்ளது காங்கிரஸ்.
ஆனால், இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் எம்.பிக்களான கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி ஆகியோரோடு காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவும் இந்தத் தீர்ப்பை வரவேற்கவில்லை.
உயர்ஜாதி ஏழைகளின் 10% இடஒதுக்கீடு- திமுக கூட்டணியில் கலகமூட்டும் பாஜக! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!
10% இட ஒதுக்கீடு
மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை திமுக உள்ளிட்ட சமூக நீதி பேசும் கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக சட்ட போராட்டங்களையும் நடத்தத் தயாராகி வருகிறது திமுக. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதான் சமூக நீதி - காங்கிரஸ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் இந்த தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டார். பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை எதிர்ப்பது என்பது சமூக நீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல. எனவே, 10 சதவிகித இடஒதுக்கீடு சரியான நடவடிக்கை என கருதி, தமிழக காங்கிரஸ் அதனை இதயப்பூர்வமாக வரவேற்கிறது எனத் தெரிவித்தார்.
பாஜகவின் குரல்
இந்தத் தீர்ப்பை பாஜக கொண்டாடி வரும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸும் பாஜகவின் குரலை ஒலிப்பது, காங்கிரஸுடன் இணக்கமாக இருந்து வரும் ஜனநாயக சக்திகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் பாஜகவை எதிர்த்தால், காங்கிரஸ் பற்றிய கேள்விகள் எழக்கூடும் என்பதால் திமுகவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸுக்குள் குழப்பம்
காங்கிரஸ் தலைமை இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் சிலர் இதற்கு எதிராகவே கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்களும் பொருளாதார அடிப்படையிலான இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக பல விஷயங்களில் திமுகவோடு முரண்படும் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், இந்த 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவின் கருத்தையே எதிரொலிக்கிறார்.
கார்த்தி சிதம்பரம்
ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதிலிருந்து பலரை விலக்கி வைக்கிறது. 3:2 விகிதத்தில் தீர்ப்பு வந்திருப்பது, எதிர்கொள்ளவேண்டிய முரண்பாடான கேள்விகளை முன்வைக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான வரையறையும் சரியானதாக இல்லை. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு உதவவில்லை எனத் தெரிவித்தார்.
ஜோதிமணி
ஜோதிமணி தனது ட்வீட்டில், உச்சநீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இடஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சம வாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது எனத் தெரிவித்துள்ளார்.
சித்தராமையா
கர்நாடகா முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, அரசியலமைப்பை நான் புரிந்து கொண்ட வரையில், இடஒதுக்கீடு கொள்கையை வரையறுக்கும் 15 மற்றும் 16 வது பிரிவுகள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினரின் ஒதுக்கீட்டை ஆதரிக்கவில்லை. வேலைவாய்ப்பு, கல்வி, சமூகப் பின்தங்கிய நிலை போன்றவற்றில் உள்ள குடிமக்களுக்கே இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.