பெரியார், திமுக, மு.க.ஸ்டாலின், தமிழக அரசு.. மாரிதாஸ் வாங்கி கட்டிக் கொண்ட சர்ச்சைகள்தான் எத்தனை!
சென்னை: அவதூறு பரப்பியே புகழ்பெற்ற மாரிதாஸ் என்கிற யூடியூபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் போகிற போக்கில் அவதூறுகளை அள்ளிவீசிவிட்டு அரசியலுக்குள் அடைக்கலம் புகுகிற இழிவான கலாசாரத்தின் அச்சாணியாக இருந்தவர் மாரிதாஸ் என்கிற சோ கால்ட் யூடியூபர்.
தமிழக அரசியல் களம் பார்க்காத விமர்சனங்கள் இல்லை.. சந்திக்காத அவதூறுகள் இல்லை.. ஆனால் புரட்டுகளை பொய்யை மட்டுமே பேசுவதையே முழுநேரமாகக் கொண்ட அரசியல்வாதிகளை தமிழகம் ஏற்றுக் கொண்டது இல்லை.
அண்மைக்காலமாக இத்தகைய அநாகரீகப் போக்கு அங்கிங்கெனாதபடி தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. அதுவும் ஒரு வெள்ளை போர்டு வைத்துக் கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் ஏதோ அரிய கண்டுபிடிப்பு ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து வந்த வலதுசாரிதான் மாரிதாஸ் என்கிற யூடியூபர். தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், திமுக மீது இடைவிடாத அவதூறுகளை அள்ளி வீசிவிட்டு அசால்ட்டாக போய்க் கொண்டிருந்த மாரிதாஸ்தான் இப்போது கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். அவரது சர்ச்சைக்குரிய ட்விட்டர், ஃபேஸ்புக், வீடியோ கருத்துகள் சில:

பாகிஸ்தானிடம் பணம் பெறும் திமுக
"விதி எண் 370 நீக்கம் குறித்து திமுகவினரின் நிலைப்பாடு ஹிஜ்புல் முஜாகிதின்,லஷ்கர் இ தொய்பா போன்ற பயங்கர வாத அமைப்புக்களுக்கு ஆதரவாக உள்ளது. திமுக பயங்கரவாதிகள் மற்றும் குற்றம் புரிவோருக்கு ஆதரவு அளிக்கிறது. திமுக இதற்காகப் பாகிஸ்தானில் இருந்து பணம் பெறுகிறதா அல்லது பயங்கரவாத அமைப்புக்களுடன் புரிந்துணர்வு அடிப்படையில் அறிக்கைகளை திமுக வெளியிடுகிறதா?"

பாகிஸ்தான் - திமுக உறவு
"திமுகவின் போராட்டத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்துக்கு நெருக்கமாக கருதப்படும் ரேடியோ சேனல் மற்றும் டெய்லி பாகிஸ்தான் ஏன் ஆதரவு தெரிவிக்கின்றன.? டெய்லி பாகிஸ்தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அனைத்து செய்திகளையும் வெளியிட்டுள்ளது. தி,க., திமுகவுக்கு ஆதரவாக டெய்லி பாகிஸ்தான் செய்தி வெளியிடுகிறது"

இஸ்ரோ-திமுக
"பாகிஸ்தான் - திமுக இரண்டு கூட்டம் தான் இஸ்ரோ தோல்வியைச் சந்தோசமாகக் கொண்டாடுகிறார்கள். திமுக ஸ்டாலின் அந்த பக்கம் ஆதரவாகப் பேசுவது போல் இந்த பக்கம் தன் ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுள்ளார் கேலி செய்ய என்று தோன்றுகிறது. மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி இஸ்ரோ ஆய்வாளர்கள் பக்கம் நிற்கவும் - இந்த தேசத்தை அவமானம் செய்த திமுக ஆதரவாளர்கள் சமீபத்தில் பெற்ற வெற்றி மமதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மன நிலைக்கு வந்துள்ளனர்"

திமுக ஆட்சியை கலைக்கனும்
"திமுக நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை! ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் திமுக ஸ்டாலின் இறங்கியுள்ளார். சட்டத்தை பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியைக் கலைப்பது தான் சரி" இத்துடன் முடியவில்லை... மாரிதாஸின் அவதூறுகள் ஏராளமாக இருக்கின்றன. இதன் உச்சமாகத்தான் தமிழக அரசை விமர்சித்து போட்ட பதிவால் இப்போது கைதாகி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications