அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று... தனியார் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் இந்த தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இப்போது மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமைச்சர் தங்கமணி மட்டுமல்லாமல் அவரது மகன் தரணிதரனுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் இருவரும் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அமைச்சர் தங்கமணியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் பழனி, ஆர்.டி.அரசு, வசந்தம் கார்த்திகேயன், செஞ்சி மஸ்தான், சதன் பிரபாகர், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி, என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வசந்தம் கார்த்திகேயனும், பழனியும் கொரோனாவில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பியுள்ளார்கள்.
வைரஸ் ஷட் அவுட்.. இதை கழுத்தில் அணிந்தால் கொரோனா கெட் அவுட்.. நம்பினால் நீங்கள் "அவுட்"
அமைச்சர் தங்கமணிக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படாததால் நேற்று வரை அவர் தனது வழக்கமான பணிகளை கவனித்து வந்தார். தலைமைச் செயலகத்தில் தனது துறை சார்பாக ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார். நேற்றைய முன் தினம் அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற ஐவர் குழு ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார்.