சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா.. 10 மடங்கு அதிகரிப்பு.. தமிழக அரசு எச்சரிக்கை
சென்னை: சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரித்துள்ளது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் அதன் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது.
இந்த அலையில் பெரும்பாலானோர் சிக்கியுள்ளனர். முதல் அலையை போல் இல்லாமல் காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாமல் உடல் சோர்வு, அசதி உள்ளிட்ட அறிகுறிகளுடன் இருக்கும் நபருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கொரோனா பரவல்
இதனால் வேகமாக பரவி வரும் கொரோனாவிலிருந்து தப்ப தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட கள அலுவலர்கள் குழுக்களுடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்தது.
கொரோனா பாதிப்பு
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பெருநகர சென்னை மாநகராட்சியை பொருத்தவரை கடந்த பிப்ரவரி மாதம் வரை 200-க்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து அடுத்த 45 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளது.
தொற்று உறுதி
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகரித்த கொரோனா பாதிப்பு, அதன் பிறகு குறைந்து தற்போது 1,300 முதல் 2 ஆயிரம் வரையிலான தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு வரை சராசரியாக 150 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1500 என உயர்ந்துள்ளது.
கொரோனா 10 மடங்கு
அதாவது 10 மடங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது வீட்டு தனிமையில் அதிகமானோர் இருக்கிறார்கள். சென்னையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி உள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் இன்னும் 12 லட்சம் பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர்.
பக்க விளைவுகள் இல்லாத தடுப்பூசி
தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி போட்டவர்கள் யாருக்கும் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. கொரோனா மையத்தை பொருத்தவரை சென்னையில் 5 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது என்று பிரகாஷ் தெரிவித்தார்.