தமிழகத்தில் 22,651 ஆக கொரோனா சரிவு.. திகில் தரும் திண்டுக்கல், குமரி.. அதிகப்படியான மரணங்கள்
சென்னை: ஊரடங்கால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 24,405 ஆக இருந்த பாதிப்பு, இன்று 22 ஆயிரத்து 651 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 14வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது .36 ஆயிரம் என்கிற நிலையில் இருந்து 22 ஆயிரம் என்கிற நிலையில் தமிழகம் கடந்த இரண்டு வாரத்தில் எட்டியுள்ளது. இன்னமும் 3 நாட்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு உள்ளதால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுவதால் தொற்று பாதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக சரிந்து இயல்பு நிலை திரும்ப வாய்ப்பு உள்ளது. கொரோனா பாதிப்பு கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இன்று அதிகமாக உள்ளது. எனினும் நேற்றைக்கு ஒப்பிடும் இன்று குறைவு தான்.. சென்னையில் நீண்ட நாளைக்கு பிறகு 2 ஆயிரத்திற்கு கீழ் கொரோனா பாதிப்பு வந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
ஜூன் 2ம் தேதியான இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,95,402 ஆக உயர்ந்துள்ளது.
குறையும் நோயாளிகள்
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று மட்டும் 33,646 பேர் மீண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை இரண்டு அலையிலும் சேர்த்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19,00,306 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 2,68,968 ஆக குறைந்துள்ளது. முன்னதாக நேற்று இந்த எண்ணிக்கை 2,80,426 ஆக இருந்தது. ஒரே நாளில் இந்த எண்ணிக்கை சுமார் 12 ஆயிரம் அளவிற்கு குறைந்துள்ளது.
சென்னையில் அதிகம்
தொற்று குறைந்த போதிலும் உயிரிழப்பு பெரிய அளவில் குறையவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்யைப் போலவே இன்றும் 463 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 71 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 38 பேரும், கோவையில் 31 பேரும், திருவள்ளூரில் 29 பேரும், கன்னியாகுமரியில் 22 பேரும், திண்டுக்கல்லில் 21 பேரும், சேலத்தில் 20 பேரும் பலியாகி உள்ளனர்.
கோவை முதலிடம்
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 2810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் 1971 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் ஈரோட்டில் 1619 பேருக்கும், சேலத்தில் 1187 பேரும், திருப்பூரில் 1161 பேரும் தொற்றால் பாதித்துள்ளனர். தஞ்சாவூரில் 1004 பேருக்கும், செங்கல்பட்டில் 909 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.