கொரோனா பரவல் ஜனவரி 26ல் நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து - அரசு அறிவிப்பு
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா பாதிப்பின் காரணமாக ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின நாளன்று கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் 18 வயது நிரம்பிய வாக்களிக்கும் உரிமை கொண்ட மக்களை உள்ளடக்கி கிராம சபை அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 5 மாதம் அவகாசம் - ஜெ.மரணத்தில் உள்ள மர்மம் விலகுவது எப்போது
கிராம சபை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்படி அமைக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பாகும். இக்கிராம சபைகள் அவ் ஊராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவை. கிராம சபைகள் செயல்படும் முறைகள் குறித்த விரிவான விதிமுறைகள் அரசால் வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம்
ஆண்டுதோறும் குறைந்த பட்சம் நான்கு முறை அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் நடத்த அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தில் மிக முக்கிய பங்காற்றும் கிராம சபைகள் ஊரக பகுதி மக்களின் குறைகளை களைந்து கிராமம் முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. இத்தகைய கிராம சபைகள் அரசியல் சார்பற்றவையாக வரையறுக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த அதிகாரம்
மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். இந்த கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்களுக்கு சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதல் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
கவனம் ஈர்த்த கிராம சபைக் கூட்டங்கள்
கடந்த 2019ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அதனையடுத்து கிராம சபைக் கூட்டம் தமிழக மக்களிடையே கவனத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பல ஊர்களில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தினார் அப்போதைய எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின்.
கிராம சபைக் கூட்டம் ரத்து
குடியரசு தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டம் கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், 'கிராம சபைக் கூட்டம் நடைபெறாமல் இருப்பதற்கு கிராம பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பி உறுதி செய்யவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.