தமிழகத்தில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் 1472 பேர் பாதிப்பு - மீண்டும் லாக்டவுன் வருமா?
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 691 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது.
எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
திடீர் வேகம்! இந்தியாவில் விரைவில் கொரோனா 4ஆம் அலை? தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க இதுதான் காரணம்
கொரோனா பரவல்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் நேற்றைய தினம் 1,382 பேருக்கு உறுதியான நிலையில் இன்றைய தினம் 1472 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 624 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 241 பேருக்கும், கோவையில் 104 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சென்னையில் 607 பேருக்கும், செங்கல்பட்டில் 240 பேருக்கும் கொரோனா உறுதியான நிலையில் இன்றைய தினம் கொரோனா பரவல் மேலும் அதிகரித்துள்ளது.
குணமடைந்தவர்கள்
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 691 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 22 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 7,458 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லாக்டவுன் வருமா?
தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளுது.