கொரோனா : தமிழகத்தில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்
தமிழகத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரேநாளில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி, 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தி ஒரேநாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் ம.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ம.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.
வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இந்த முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன. கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ம.சுப்ரமணியன்,
கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நிபா வைரஸ் தாக்கம் என்கிற செய்தி கிடைத்தும் கேரள, தமிழக எல்லையோரம் உள்ள 9 மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு கூடுதலாக சோதனை நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 33 லட்சம் வரை தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தி ஒரேநாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீதான பாதிப்பு 2ஆம் அலை தொடக்கத்தில் இருந்து இருக்கிறது. ஆனால் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. இருப்பினும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளிகளில் உடனேயே கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.50 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப் பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் மெகா தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.மோகன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சிகளில் உள்ள 75 வார்டுகள், மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள், 688 கிராம ஊராட்சிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நூறுநாள் வேலை நடைபெறும் பணியிடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என 1,150 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவித்தார். இம்முகாமிற்கான பணிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள், அனைத்துத்துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் என 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகாமில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் இம்முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி இலக்கை எய்திட உதவியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் யாருக்கும் எந்தவித அச்ச உணர்வு வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவையில் தடுப்பூசி வீடு தேடி வரும்
கோவையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் ,மாநகராட்சியும் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.இவற்றில் முக்கிய அம்சமாக, மாவட்டத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி மையங்களுக்கு வர இயலாத காரணத்தால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளாமல் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதனையடுத்து முகாமுக்கு வந்து தடுப்பூசி போட்டு கொள்ள இயலாதவர்களுக்காக கோவை மாநகராட்சி சூப்பர் திட்டத்தை தொடங்கியுள்ளது. மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் பேரில் 'வீடு தேடி தடுப்பூசி' போடும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த பிரத்யேக திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், 0422 230 2323, 97505 54321 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தடுப்பூசியை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஹோம் டெலிவரி செய்யப்படும், அப்போது பயனிாளிகள் தங்களது ஆதார் அட்டையை காண்பித்து தடுப்பூசியை பெற்று கொள்ளலாம் என்று கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications