3 மாதங்களில் முதல் கொரோனா மரணம்... பூஸ்டர் டோஸ் கட்டாயம்.. தீவிர ஆய்வில் அமைச்சர் மா.சு
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 476 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 221 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 221 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேபோல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,938 ஆக உள்ளது.
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் உயிரிழந்தார். இவருக்கு எந்தவித இணைநோயும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து செங்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற மாநிலங்களில் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் பாதிப்புகள் குறைவாகவே உள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 95 சதவிதமாகவும், இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 85 சதவிகிதமாகவும் உள்ளது. இப்போது இரண்டாவது தவணை செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் முடிவடைந்தவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வு. தஞ்சையைச் சேர்ந்த இளம் பெண் உயிரிழப்புக்கு, அஜாக்ரதையே காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது உடலில் சிறிய அளவில் மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகமிருக்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழல் மாறினாலும் , சிகிச்சைக்கு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications