கை மீறி போகிறதா சென்னை.. சாட்டையை கையில் எடுக்கும் முதல்வர்.. அதிரடி ஆலோசனை.. அவசர சந்திப்புகள்!
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்
சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கட்டுக்கடங்காமல் கலக்கத்தை தந்து வரும் சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.
Recommended Video
தமிழக அரசு சிறப்பாகவே தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.. சுகாதாரத்துறை பணியாளர்கள் முதல் மருத்துவ ஊழியர்கள் வரை அர்ப்பணிப்புடன் வேலை பார்த்து வருகின்றனர். ஆனாலும் தப்பு எங்கேயோ நிகழ்ந்து விட்டது.
நாளுக்குள் நாள் சென்னையில் பாதிப்பு மிரட்டி வருகிறது.. ஒவ்வொரு நாளும் இதன் வீரியம் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டை நினைத்தாலே பீதி கிளம்புகிறது.. கோயம்பேடு பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடன் இருந்த போலீசார் டிரைவருக்கும் டெஸ்ட் நடந்து வருகிறது.
தொற்று உறுதி
சென்னையில் தினமும் இப்படி 100, 200, பேர் என்ற தொற்று இன்று 500-ஐ தொட்டுவிட்டது.. இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 527 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கோயம்பேடு மார்க்கெட் என்றுதான் யூகிக்கப்படுகிறது. இதனால் சென்னை மட்டுமல்ல, கோயம்பேட்டுக்கு லோடு இறக்கவும், ஏற்றவும் சென்று வந்த மற்ற மாவட்ட லாரி டிரைவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
சளி, ரத்த மாதிரிகள்
அதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள லாரி டிரைவர்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சென்னையில் பொதுமக்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள், போலீசார், என்ற வரிசையில் ஐபிஎஸ் அதிகாரியும் சேர்ந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் முதலமைச்சர் துரித நடவடிக்கைகளை எடுக்க உள்ளார். இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார்.
ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வுகள் உள்ளிட்டவை பற்றி ஆளுநருடன் ஆலோசனை முதல்வர் செய்தார்.. இந்த ஆலோசனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த அறிக்கையையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முதல்வர் தாக்கல் செய்தார்.
சென்னை
இதன் அடுத்தக்கட்டமாக தலைநகர் சென்னையில் பாதிப்பு என்பதால், மாநகராட்சி அலுவலகத்தில் அரசின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். நாளை காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் சென்னை கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவது, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.
ஆலோசனை
இன்று ஒரே நாளில் 527 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது யாருமே எதிர்பாராத ஒன்று.. இதனால் சென்னைவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.. எப்படியும் நாளை முதல்வர் நடத்தப்போகும் ஆலோசனையில் மிக முக்கிய, அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகும் என்றும் தெரிகிறது.