புருஷன் வீட்டு வாசலை தாண்டாம மனைவி பார்த்துக்கணும்.. மீறினால்.. ட்வீட் போட்டு மாஸ் காட்டிய ராமதாஸ்!
இல்லத்தரசிகளுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை: "புருஷன் வீட்டு வாசலை விட்டு வெளியே கால் எடுத்து வைக்க மனைவி அனுமதிக்க கூடாது.. அப்படி மீறி வெளியே போனால், ''கொரோனா நோயை கொள்முதல் செய்ய போறீங்களான்னு கேட்டு எச்சரித்து அவங்களை தடுத்து நிறுத்தணும்.. ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான்" ராமதாஸ் டபுள் ட்வீட் போட்டு மாஸ் காட்டி உள்ளார். கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் பரவுவதற்கு முன்பிருந்தே அது குறித்த பல்வேறு ஆலோசனைகளை தினமும் ட்விட்டரில் தெரிவித்து வருபவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
"திரும்பவும் சொல்கிறேன். கொரோனா வைரஸ் நோயை தடுக்க பிறருடன் கைகுலுக்குவதை தவிருங்கள்; கைகூப்பி வணக்கம் சொல்லுங்கள். குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறையும், சாத்தியமில்லாதவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதும் சோப்பால் கைகளை 20 வினாடிகளுக்கு நன்றாக கழுவுங்கள்!" என்று சொல்லி கொண்டே இருந்தார்.
சோப்பு வாங்க வசதியில்லாத மக்கள் எப்படி அடிக்கடி கையை கழுவ முடியும்.. பொதுமக்களுக்கு கைகழுவ அரசு இலவச சோப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும் கோரிக்கையும் வைத்தார்... 144 தடை உத்தரவு தமிழகத்துக்கு வேண்டும் என்று கேட்டு கொண்டே இருந்தார்.. மாணவர்களுக்கு தேர்வினை ஒத்தி வைக்க வலியுறுத்தினார்.. லாக் டவுன் நாட்டுக்கு கட்டாயம் தேவை என்று கோரிக்கை விடுத்தார். டாக்டரின் பெரும்பாலான கோரிக்கைகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. அதற்காக மத்திய, மாநில அரசுகளையும் மனசார பாராட்டி உள்ளார்.
இப்போது அடுத்ததாக குடும்ப தலைவிகளுக்கு ஒரு அட்வைஸ் தந்துள்ளார்.. இதற்காக ஒன்றுக்கு இரண்டு ட்வீட் பதிவிட்டுள்ளார். "ஆக்கும் சக்தியும், காக்கும் சக்தியும் பெண்கள் தான். கொரோனா பரவலைத் தடுப்பதற்கான ஊரடங்கு ஆணையை வீட்டு அளவில் செயல்படுத்தும் கடமையும், பொறுப்பும் இல்லத்தரசிகளுக்கு உண்டு. அவர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றி வீட்டையும், நாட்டையும் காக்க வேண்டும்!" என்று முதல் ட்வீட்!!
"குடும்பத் தலைவரும், குழந்தைகளும் வீட்டு வாசலை விட்டு வெளியே கால்களை எடுத்து வைக்க குடும்பத் தலைவிகள் அனுமதிக்கக் கூடாது. வெளியில் சென்றால் ''கொரோனா நோயை கொள்முதல் செய்யப் போகிறீர்களா?'' என்று எச்சரித்து தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவை விரட்டும் சக்தி பெண்கள் தான்!" என்பது 2-வது ட்வீட்! வழக்கம்போல ராமதாஸின் ட்வீட்டுக்கு ஏகப்பட்ட கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.."அன்னைக்கே சரஸ்வதியம்மா செஞ்சிருந்தா, இன்னைக்கு இவ்வளவு நடந்துருக்காதுல டாக்டரய்யா" என்றும் "உங்களுக்கு என்னய்யா??? நாங்க சாப்பாட்டுக்கு இன்னா பன்னுறது???",
"கொரோனா வராமல் வாயை மூடலாம் அய்யா...ஏழை எளிய, சாதாரண, தினக்கூலிகள், அனாதைகள், வீடற்றோர் இவர்களின் வயிற்றை 21 நாட்கள் பட்டினியால் மூடமுடியாதே அய்யா..மத்திய அரசிடம் நிவாரணம் கேளுங்கள்...நமது மாநில அரசு நிதி நெருக்கடியிலும் சிறப்பாக செயல்படுகிறது..மத்திய அரசு ஏன் செய்யவில்லை?"என்றும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
Recommended Video
ஒருசிலர் "ஐயா பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்னும் உத்தரவை மதிக்காமல் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் ..." என்று கோரிக்கையும் வைத்து வருகிறார்கள். எனினும் டாக்டர் போட்ட இந்த 2 ட்வீட் பெண்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது!