வெறும் 8 நாட்கள்.. கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பரவியது எப்படி.. சறுக்கியது எங்கே.. முழு பின்னணி!
கோயம்பேடு சந்தை மூலம் சென்னை மற்றும் தமிழகம் முழுக்க கொரோனா பரவியது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
சென்னை: கோயம்பேடு சந்தை மூலம் சென்னை மற்றும் தமிழகம் முழுக்க கொரோனா பரவியது எப்படி என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தின் மிக மோசமான கொரோனா எபிசென்டராக கோயம்பேடு மாறியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் வேகம் தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக சென்னையில் கொரோனா தீவிரம் எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று 527 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மொத்தமாக 3550 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தமிழகத்தில் இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பயன் அளிக்காத 3 லாக் டவுன்கள்.. கடந்த 24 மணி நேரம் மிக மோசம்.. இந்தியாவில் கொரோனா படுதீவிரம்!
சென்னை பாதிக்க காரணம்
இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1724 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இப்படி அதிகமாக கொரோனா பாதிப்பு ஏற்பட காரணம் கோயம்பேடு மார்க்கெட்தான் என்பது குறிப்பிடதக்கது. நேற்று தமிழகத்தில் ஏற்பட்ட 88% கேஸ்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட தொடர்புகள் மூலம் வந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு உள்ளே மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 95 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் எத்தனை
மொத்தமாக கோயம்பேடு சந்தை மூலமாக சென்னையில் 180க்கும் அதிகமான நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் கோயம்பேடு சந்தைக்கு உள்ளே தனியாக 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக கோயம்பேடு பகுதியில் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் காரணமாக புளியந்தோப்பில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
அருகே உள்ள பகுதிகள்
கோயம்பேடு சந்தை காரணமாக சம்மத்அம்மன் நகர், ஐயப்பா நகர் ஆகிய பகுதிகள்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா உள்ளது. அதேபோல் கோயம்பேடு மார்க்கெட் காரணமாக எம்எம்டிஏ காலனியில் 18 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு எல்லா தெருவிலும் கொரோனா ஏற்பட்டது. மேலும் சாத்தான் குளத்தில் ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
எப்போது தோன்றியது
இதற்கு எல்லாம் காரணமாக கோயம்பேடு சந்தை. சரியாக 8 நாட்களுக்கு முன்புதான் கோயம்பேட்டில் முதல் நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதாவது சரியாக கடந்த 27ம் தேதி அங்கு காய்கறி கடை வைத்திருந்த நபர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது. அவரை தொடர்ந்து பலருக்கும் வரிசையாக அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இப்படி கொரோனா பரவ போதுமான சமூக இடைவெளி இல்லாததுதான் காரணம் என்கிறார்கள்.
நெருக்கமாக பழகினார்
உதாரணமாக இந்த காய்கறி கடை நபர் அருகே இருந்த கடைகளுடன் நெருக்கமாக பழகி உள்ளார். அதேபோல் அங்கு லோட் ஏற்றும் நபர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். மேலும் மற்ற கடைகளுக்கும் அவ்வப்போது சென்று உதவிகளை செய்துள்ளார். இந்த நபருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. அதாவது அந்த நபருக்கு மார்க்கெட்டுக்கு வந்த ஒருவர் மூலம் கொரோனா பரவியதா அல்லது வேறு பணியாளர்கள் மூலம் கொரோனா வந்ததா என்று தெரியவில்லை.
ஸ்டேஜ் 3
ஆனால் இவரை சோர்ஸ் போல வைத்து பார்த்தால், இவர் மூலமே கோயம்பேடு சந்தையில் பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இனி கோயம்பேடு சந்தையில் எப்படி கொரோனா உருவானது, எப்படி முதல் நபர் பாதிக்கப்பட்டார் என்று கண்டுபிடிக்க முடியாது. அது பலனும் அளிக்காது. கோயம்பேடு சந்தையும் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் தற்போது உறுதியாக ஸ்டேஜ் 3 பரவல் வந்துவிட்டது என்று கூறுகிறார்கள். மொத்தம் மூன்று வகைகளில் இந்த கோயம்பேடு சந்தை காரணமாக தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு உள்ளே பரவல்
முதலில் கோயம்பேடு சந்தைக்கு உள்ளேதான் அதிகமாக கொரோனா பரவி இருக்கிறது. அதாவது கோயம்பேடு சந்தையில் பணியாற்றும் நபர்களுக்கு உள்ளே பரவி உள்ளது. அங்கு பூக்கடை, மளிகை கடை, பழக்கடை வைத்திருக்கும் நபர்களுக்கு இடையே பரவி உள்ளது. அவர்கள் மூலம் , அவர்களின் குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு பரவி உள்ளது. இதுதான் கோயம்பேடு சந்தையின் முதல் பரவல் முறை என்கிறார்கள்.
சென்னைக்குள் பரவியது
இந்த கோயம்பேடு சந்தைக்கு வந்த நபர்கள் மூலம் சென்னைக்கு உள்ளே கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதாவது இந்த கொரோனா பாதிக்கப்பட்ட கடைக்காரர்களை தொடர்பு கொண்டதால் அவர்கள் மூலம் அந்த கடைக்கு வந்த பொது மக்களுக்கு கொரோனா வந்துள்ளது. இவர்கள் கொரோனாவை சுமந்து கொண்டு தங்கள் ஏரியாவிற்கு சென்றுள்ளனர். அங்கு கொரோனா பரவி உள்ளது. இதுதான் கடந்த சில நாட்களாக சென்னையில் காண்டாக்ட் இல்லாத கேஸ்கள் அதிகம் வர காரணம்.
மூன்றாவது பரவல் எப்படி
இந்த மூன்றாவது பரவல்தான் கொஞ்சம் சிக்கலானது. ஏனென்றால் இந்த கோயம்பேடு சந்தைக்கு லோட் அடித்த பல்வேறு மாவட்ட மக்கள் மூலம், லாரி ஓட்டுனர்கள் மூலம் தமிழகம் முழுக்க கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இங்கே வந்துவிட்டு திரும்ப தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு சென்றவர்கள் அந்த மாவட்டங்களில் கொரோனாவை பரப்ப தொடங்கி உள்ளனர். இதுதான் தமிழகத்தில் மீண்டும் கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்கிறார்கள்.
8 நாட்களில் விரிந்தது
கோயம்பேடு என்ற பகுதியை ஒரு புள்ளி போல எடுத்துக்கொண்டால், அந்த புள்ளியில் இருந்து தமிழகம் முழுக்க எல்லா பகுதிக்கும் கொரோனா பரவி உள்ளது. பூக்கடைக்கார்கள் தொடங்கி லோட் அடித்த நபர்கள் வரை எல்லோருக்கும் கொரோனா பரவி உள்ளது. சென்னையில் காவலர்கள் பலருக்கு கொரோனா பரவவும் கோயம்பேடு மார்க்கெட் சென்றதுதான் காரணம் என்கிறார்கள். 8 நாட்களில் தமிழகத்தை கொரோனா புரட்டி போட்டுள்ளது.
தடுக்க முடியாது
கோயம்பேடு சந்தை மூலம் பரவிய கொரோனாவை இன்னும் சில நாட்களுக்கு தடுக்க முடியாது. கடந்த 10 நாட்களாக கோயம்பேடு சந்தை சென்ற எல்லோரும், அங்கு பணியாற்றிய எல்லோரும் தாமாக முன்வந்து சோதனை செய்ய வேண்டும். டெல்லி மாநாடு சென்றவர்கள் தாமாக முன்வந்து சோதனை செய்தது போல, அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்தியது போல இவர்களும் செய்ய வேண்டும். அப்போது மட்டுமே இதை கொஞ்சம் தடுக்க முடியும்!