இறைச்சி கடைகள் மூடல்- நாட்டு கோழிகளை நாடும் அசைவப்பிரியர்கள்.. விலை கிடுகிடு உயர்வு
சென்னை: கொரோனா லாக்டவுனை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் ஆடு, கோழி இறைச்சி கடைகள், மீன் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டு கோழிகளை அசைவப்பிரியர்கள் நாடி வருகின்றனர். இதையடுத்து நாட்டு கோழிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Recommended Video
கொரோனா லாக்டவுன் வரும் 14-ந் தேதி வரை அமலில் உள்ளது. 3 வாரங்களாக லாக்டவுன் அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தனிநபர் இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டதால் தனிநபர் இடைவெளியைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது. அத்துடன் இறைச்சி விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.
லாக்டவுனையே சீர்குலைக்கும் வகையில் பொதுமக்கள் இறைச்சி கடைகளில் ஒன்று கூடுவது அரசு நிர்வாகத்துக்கு பெரும் தலைவலியாகவும் இருந்தது. இதனையடுத்து மாவட்டங்களில் இறைச்சி கடைகளை திறக்க கூடாது என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆனாலும் உத்தரவை மீறி இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.

இதனால் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகளை திறக்க முதலில் தடை விதிக்கப்பட்டன. பின்னர் லாக்டவுன் முடியும் வரை இறைச்சி கடைகளையே திறக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது. இதனால் இன்று பல மாவட்டங்களில் இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்தன.
நாட்டுக் கோழி
இதையடுத்து அசைவப் பிரியர்கள் தற்போது நாட்டுக் கோழிகளை நாடி செல்கின்றனர். நாட்டு கோழியை தேடி கிராமங்களுக்கு அசைவப் பிரியர்கள் படையெடுக்கின்றனர்.

தற்போது நாட்டுக் கோழி விலையும் அதிகரித்துள்ளது. உயிருள்ள கோழி 1 கிலோ ரூ500 வரையும் கோழி கறி 1 கிலோ ரூ700 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் வாரங்களில் லாக்டவுன் நீடிக்கப்படலாம் என்பதால் இப்போதே உயிருள்ள கோழிகளை வாங்கி சென்று ஸ்டாக் வைக்கிறவர்களையும் கிராமங்களில் பார்க்க முடிகிறது.
இறைச்சி கடைகளுக்கு சீல்
இதனிடையே லாக்டவுன் தடை உத்தரவுகளை மீறி திறக்கப்பட்ட இறைச்சி கடைகள் சீல் வைக்கப்பட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் அஸ்தம்பட்டியில் காதர்பாட்ஷா என்பவரின் இறைச்சி கடை இன்று சீல் வைக்கப்பட்டது. அங்கு 35 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் லாக்டவுனில் இறைச்சி கடையை திறந்ததால் ரூ5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவையில் இறைச்சி கடைகள்
அதேநேரத்தில் கோவையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் பகல் 1 மணிவரை இறைச்சி கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் கோவையில் ஏப்ரல் 14-ந் தேதி வரை இறைச்சி கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தும் உள்ளது.












Click it and Unblock the Notifications