20,000,000,000,000.. இது டிரெயிலர்தான்.. மெயின் பிக்சர் வரட்டும்.. 4வது லாக்டவுன் எப்படி இருக்கும்?
4.0 லாக்டவுன் நீட்டிப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: "இது டிரெயிலர்தான்.. மெயின் பிக்சர் வரட்டும்.. பார்க்கலாம்" என்று பிரதமரின் நிதி அறிவிப்பு குறித்து அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. நேற்றிரவு பிரதமர் மோடியின் பேச்சும், அறிவிப்பும் எந்த மாதிரியாக செயல்வடிவம் பெறப் போகிறது, அமலாகும் முறை, அமலின்போது உள்ள முறை போன்றை எப்படி இருக்க போகின்றன என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டுள்ளது.
Recommended Video
பிரதமர் மோடியின் உரையை பொறுத்தவரை, இதற்கு முன்பு 3 முறை இல்லாததைவிட ஒரு எழுச்சி தரக்கூடிய உரை என்றே சொல்லலாம்.. நம்பிக்கை தரக்கூடிய உரையும் கூட.. அதில் எந்தவித மாற்று கருத்தில்லை.. அவரது அறிவிப்பில் 2 முக்கியமான விஷயம் கவனிக்கத்தக்கது.. ஒன்று ஊரடங்கு நீட்டிப்பு.. மற்றொன்று நிதி ஒதுக்கீடு!!
4.0 லாக்டவுன் என்று எடுத்து கொண்டால் புது வடிவங்களுடன் வரப்போகிறது என்கிறார்.. அதனால் நிச்சயம் சில தளர்வுகளும் இருக்கும், சில உறுதி பிடிப்புகளும் இருக்கும். ஆனால் தளர்த்தப்படும் தளர்வுகள் எந்தவிதத்திலும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருந்துவிடக்கூடாதே என்ற கலக்கம் எழுந்துள்ளது. இது நம் மாநிலத்தை எந்தவிதத்தில் அசைத்து விடபோகிறது, எந்த வகையில் காக்க போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொற்று எண்ணிக்கை
எது எப்படி இருந்தாலும், கோயம்பேடு, மதுக் கடை திறப்பு போன்ற மகா குழப்பங்கள் அறவே தவிர்க்கப்பட வேண்டியது மிக மிக அவசியம்.. நம்முடைய தொற்று எண்ணிக்கை உயர்வதற்கும், இனி உயர போவதற்கும் காரணிகளாக இருக்க போவது இந்த விஷயங்கள்தான். இந்த 2 இடங்களை பற்றிதான் மாறி மாறி அறிவிப்புகள் வந்து மக்களை குழப்பி கொண்டிருக்கிறது.. இந்த 2 இடங்களால்தான் பெரும்பாலானோர் அதிருப்திக்கும் ஆளாகி உள்ளனர்.

அறிவிப்புகள்
நேற்று முன்தினம் பிரதமருடன் நம் முதல்வர் ஆலோசனை நடத்தும்போதும் வைரஸ் பாதிப்பு குறித்த நிலவரத்தை எடுத்து முன்வைத்திருந்தார். அதனால் கோயம்பேடு, டாஸ்மாக் கடைகளுக்கு கண்டிப்பாக ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எல்லாவற்றையும்விட முக்கியம் மக்களின் ஒத்துழைப்புதான்.. அதையும் விட முக்கியம் அரசு நிர்வாகங்கள் மக்களை குழப்பாத வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்... மார்க்கெட் திறப்பு பிறகு மூடல், மதுக் கடை திறப்பு பிறகு மூடல் என்று குழப்பிக் கொண்டிருந்தால் எந்த பலனும் இருக்காது.

வாழ்வாதாரம்
அதேபோல, பிரதமர் பேச்சில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பற்றி பெரிதாக எந்த விஷயமும் சொல்லப்படவில்லை.. கூலி தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றியும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.. இவ்வளவு காலம் ஏழை எளிய மக்களுக்கென்று ஏதாவது சிறப்பு அறிவிப்பு வருமா என்றுதான் அனைவரும் காத்திருந்தனர்.. அந்த வகையில் பிரதமரின் பேச்சு ஏமாற்றத்தையே தந்தது.. அது மட்டுமில்லை.. புலமபெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.. அவர்களுக்கு ஒரு இரங்கலைகூட பிரதமர் சொல்லாதது வருத்தம் அளிக்கக்கூடியதாகவே உள்ளது.

மருத்துவ தேவை
அவசர தேவைகளுக்கு, மருத்துவ தேவைகளுக்கு மாநில அரசாங்கங்கள் கேட்டபோதே உரிய காலத்தில் அறிவிக்காத நிதியை, தற்போது பொருளாதார தேவைகளுக்காக அறிவிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.. எப்படியும் சென்ற முறை போலவே இந்த முறையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார பேக்கேஜ் பற்றி அறிவிப்பு வெளியிடக்கூடும்.. இதில் என்ன மாதிரியான திட்டங்கள் அடித்தட்டு மக்களுக்கு இருக்கப் போகிறது என்று தெரியவில்லை.. ஏனென்றால், முதல்முறை நிதி அறிவித்தபோது அதன் பலன் ஏழை மக்களுக்கு போய் சேரவில்லை.. அதனால்தான் சோனியா காந்தி முதல் ப.சிதம்பரம் வரை கொதித்தெழுந்தனர்.. அதனால் நிதியமைச்சரின் அறிவிப்புகள்தான் இப்போதைக்கு எதிர்பார்ப்புக்குரியதாக உருவெடுத்திருக்கிறது..

அமைப்பு சாரா தொழிலாளர்கள்
அதேபோல, தொழில் வளர்ச்சியைத்தான் பிரதமர் பெரிதாக பேசியிருக்கிறார்... கூலி தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் நலன் பற்றி அறிவிக்காதது சற்று வருத்தம்தான்.. ஒருவேளை நிதியமைச்சர் இன்று அறிவிக்க இருந்தாலும், பிரதமர் தன் வாயால் அதை அறிவித்திருந்தால் இதுவரை காத்து கிடந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை அளிப்பது போல இருந்திருக்கும்.

கார்ப்பரேட்டுகள்
ரூ.20,000,00,00,00,000 அதாவது 20 லட்சம் கோடி ரூபாய் அறிவித்துள்ளார் என்றாலும், இவை ஏழை எளிய சாமானிய மக்களுக்கு முழு பயனையும் அளிப்பதாக இருக்க வேண்டும்... சென்றமுறை நிதியமைச்சர் பொதுசுகாதாரத்துக்கு வழங்கப்பட்ட தொகையை விட இந்த முறை அதிகமாகவே ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழ ஆரம்பித்துவிட்டது.. இந்நிலையில், இந்நிதி கார்ப்பரேட்களின் கைகளுக்கும் போய்விடகூடாதே என்கிற பயமும் எதிர்க்கட்சிகளுக்கு எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது.. ஒவ்வொரு முறையும், உலகத்துக்கு வழிகாட்டக்கூடிய அளவில் நாம் இருக்கிறோம் என்று பிரதமர் தன் பேச்சில் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. ஆனால் அது எந்த வகையில் என்பது சற்றும் இதுவரை விளங்கவில்லை.

படு குழப்பம்
இறுதியாக, 4வது கட்ட லாக்டவுன்தான் என்பதுதான், கடைசி லாக்டவுனா என்ற முடிவுக்கும் நம்மால் வர முடியவில்லை.. காரணம் மாநிலத்துக்கு மாநிலம் படு குழப்பமான முடிவுகளை எடுக்கிறார்கள், குழப்புகிறார்கள். அதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் வரும் என்று தெரியவில்லை என்றாலும், லாக்டவுனை விட்டால் வேறு வழியும் இல்லை என்பதே நிதர்சனம். மொத்தத்தில் பிரதமரின் அறிவிப்புகளை பொறுத்தவரை, எல்லாமே நன்றாக இருக்கிறது.. உத்வேகத்தை தரக்கூடிய பேச்சு.. ஒரு பூஸ்ட் கிடைத்த மாதிரி இருக்கிறது.. மிகப்பெரிய நம்பிக்கை ஊட்டக்கூடிய அளவுக்கும் உள்ளது.. எனினும் இவை நடைமுறையில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!!












Click it and Unblock the Notifications