சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி!
சென்னை: சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் கடந்த 13-ஆம் தேதி ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில் பிற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 570 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் வேப்பேரி சித்த மருத்துவ வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் 3-ஆவது அலை தொடக்கத்தில் உள்ளது. அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் தமிழகத்தில் இயங்கத் தொடங்கின. அன்று முதல் பள்ளிகளிலும் கொரோனா தொற்றால் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு இந்த மாத இறுதியில் தெரியும். ஏற்கெனவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா பாதிப்பு அவதிப்படும் நிலையில் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுவதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.