ரூ.500 மளிகை பொருள்.. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் வழங்க வேண்டும்.. சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு!
சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்பட உள்ள 500 ரூபாய்க்கான மளிகைப் பொருட்களை ரேசன் கார்டு இல்லாத அனைத்து மக்களுக்கும், நேரடியாக வீட்டிலேயே வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஊரடங்கின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமிழக அரசு, வீட்டிற்கு தேவையான 19 வகையான மளிகைப் பொருட்களுக்கான தொகுப்பை ரேசன் கடைகளில் ரூபாய் 500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது.

500ரூபாய் மதிப்பிலான இந்த அத்தியாவசிய பொருட்கள், குடும்ப அட்டை வைத்திருப்பவர் மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாத அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதோடு நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் மளிகைப் பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து வழங்க உத்தரவிடக் கோரியும் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொரோனோ நோய் தொற்றை எதிர்கொள்ள ஊட்டச்சத்து அவசியமாக உள்ள சூழலில் ஊரடங்கினால் 10 லட்சத்திற்கும் அதிகமான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு போதுமாக உணவு கிடைக்காத நிலை உள்ளது.
அத்தகைய ஏழை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான உணவை எடுத்து செல்லும் தன்னார்வலர்களை கைது செய்ய கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications