8ம் தேதி தொடங்கியது.. தமிழகத்தில் அடுத்தடுத்த கொரோனா மரணம்.. வயதும் குறைவு.. என்ன நடக்கிறது?
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கொரோனா காரணமாக பலியாகும் நபர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சென்னை: தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கொரோனா காரணமாக பலியாகும் நபர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதித்த 11, 224 பேரில் 4, 172 பேர் குணமடைந்துள்ளனர்.
3 நாட்கள் கழித்து 500-ஐ தாண்டிய தமிழக கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்?
இன்று பலி
தமிழகத்தில் இன்று மட்டும் 4 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று பலியான நான்கு பேரில் இரண்டு பேர் திருவள்ளூரை சேர்ந்தவர்கள். இரண்டு பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மொத்தமாக இந்த நான்கு பேரில் மூன்று பேர் 40+ வயது கொண்டவர்கள். ஒருவர் மட்டும் 65 வயது நிரம்பியவர். தமிழகத்தில் இதனால் கொரோனா மரணம் 78 ஆக உள்ளது. தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் தற்போது 1.4% ஆக உள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கிறது
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழக மக்களை இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கொரோனா காரணமாக பலியாகும் நபர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சரியாக கடந்த 8ம் தேதி தமிழகத்தில் 4 பேர் பலியானார்கள். அதற்கு மறுநாள் 4 பேர் பலியானார்கள். அதன்பின் அதற்கு மறுநாளும் 4 பேர் பலியானார்கள்.
வேகம் எடுக்கும் பலி எண்ணிக்கை
அதன்பின் தினமும் 3, 4 என்ற எண்ணிக்கையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இடையில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரே நாளில் 6 பேர் தமிழகத்தில் பலியானார்கள்.கேஸ்கள் எண்ணிக்கை குறைந்தாலும் இறப்பு எண்ணிக்கை தினமும் ஒரே மாதிரி இருக்கிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் 4 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இப்படி இறப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்வது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறைந்த வயது?
தொடக்கத்தில் இப்படி பலியான நபர்கள் பலர் 60 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் போக போக தற்போது வயது குறைவாக உள்ளவர்களும் கொரோனாவால் பலியாகி வருகிறார்கள். கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் 50 வயதுக்கும் குறைவான நபர்கள் 15க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இப்படி குறைந்த வாயது உள்ள நபர்கள் தமிழகத்தில் தொடர்ந்து பலியாக தொடங்கி உள்ளனர்.
ஒரே ஒற்றுமை
ஆனாலும் இதற்கு மத்தியிலும் தமிழகத்தில் இப்படி பலியாகும் நபர்களுக்கு இடையே முக்கியமான ஒற்றுமை உள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே இருதய பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இவர்கள் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். பலருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது. இதனால்தான் கொரோனா சிகிச்சை மிக சிறப்பாக அளிக்கப்பட்டும் கூட இவர்கள் பலியாகி உள்ளனர்.
கடைசியில் வந்தனர்
அதேபோல் இவர்களில் பலர் கொரோனா அறிகுறி இல்லாமல் அனுமதியாகி உள்ளனர். கடைசி நேரத்தில்தான் இவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனை வந்துள்ளனர். இதனால் இவர்களுக்கு சரியாக சிகிச்சை அளிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் அனுமதிக்கப்பட்டதால் இவர்களுக்கு சரியாக சிகிச்சை அளித்தும் கூட உயிரை காக்க முடியவில்லை என்கிறார்கள்.