சரியான 'அட்வைஸ்' தந்த ஸ்டாலின்.. லேட்டாக முடிவு எடுத்த முதல்வர்.. தமிழக அரசியலில் 'கொரோனா' ஆட்டம்!
கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசியலில் நிறைய அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசியலில் நிறைய அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. கொரோனாவை தமிழக அதிமுக அரசு எதிர்கொள்ளும் விதம் பல அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
உலகம் முழுக்க போரும், பொருளாதார சீர்குலைவும் ஒரு நாட்டின் தலைவரின் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். இக்கட்டான சூழ்நிலையில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதுதான் தலைமைப்பண்பை தீர்மானிக்கும். அதில் தற்போது கொரோனா வைரஸை சேர்த்துக் கொள்ளலாம்.
ஆம் கொரோனா வைரஸை எப்படி அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், மாநில முதல்வர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் தலைமைப்பண்பு தீர்மானிக்கப்படும். அவர்களின் ஆட்சி அதிகாரம், திறமை முடிவு செய்யப்படும்.

தமிழகமும் அப்படித்தான்
தமிழக அரசியலும் அப்படித்தான். தமிழகத்தில் தற்போது கொரோனா காரணமாக அதிமுக அரசு மீது மிகப்பெரிய கத்தி தொங்கி வருகிறது. மிக மிக கவனமாக, திறமையாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும் கொரோனா பல உயிர்களை பலி வாங்கிவிடும். இதனால் கொரோனாவிற்கு எதிராக மிக தீவிரமாக, அதே சமயம் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அதிமுக அரசு இருக்கிறது.

தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்
இதை அதிமுக அரசும், முதல்வர் பழனிசாமியும் உணர்ந்து இருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். இதனால்தான் அதிமுக அரசு தங்களிடம் இருக்கும் மொத்த ரிசோர்ஸ்களையும் தீவிரமாக களமிறக்கி பணிகளை கவனித்து வருகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும் இன்னொரு பக்கம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்னொரு குழுவும் தீவிரமாக கொரோனா பணிகளை கண்காணித்து வருகிறது.

நல்ல மார்க் எடுத்த அதிமுக
கொரோனாவிற்கு எதிராக இதுவரை தமிழக அரசு கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது. தமிழகத்திற்கு இணையான மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா இரண்டும் கொரோனாவிற்கு எதிராக திணறி வருகிறது. தமிழகத்தை விட சின்ன மாநிலமான கேரளா மிக மோசமாக கொரோனாவிடம் திணறி வருகிறது. ஆனால் தமிழகம் ஓரளவிற்கு கொரோனவை கட்டுப்படுத்தி உள்ளது. இதுவரை தமிழக அரசு இதில் குட் மார்க்தான் வாங்கி உள்ளது.

ஆனால் போக போக வெடிக்கும்
ஆனால் தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரையில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இவருக்கு எப்படி ஏற்பட்டது என்றே தெரியவில்லை. இதனால் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா பெரிய அளவில் வெடிக்கும் என்று கூறுகிறார்கள். தமிழகத்திலும் கேரளா போல கொரோனா தீவிரமாக பாதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

இங்குதான் ஸ்டாலின் வேலை
இங்குதான் திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தன்னுடைய திறமையை காட்டி உள்ளார். எப்படி அதிமுக சரியான திட்டமிடலுடன் செயல்படுகிறதோ அதேபோல் திமுகவும் கொரோனாவிற்கு எதிராக சரியாக செயல்படுகிறது. ஒரு எதிர்க்கட்சியாக அரசை எப்படி எல்லாம் வழி நடத்த முடியுமோ அப்படி எல்லாம் தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார்.

ஸ்டாலின் நிலவரத்தை பேசுகிறார்
இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம்.
முதலில் தமிழகத்தில் லாக் டவுன் கொண்டு வர வேண்டும் என்று கூறியது திமுகதான்.
சட்டமன்ற கூட்டத் தொடரை நிறுத்திவிட்டு, எம்எல்ஏக்களை மக்கள் பணி செய்ய அனுப்ப வேண்டும் என்று கூறியது ஸ்டாலின்தான்.
மக்களை வீட்டிற்குள் அடைக்க வேண்டும், அதே சமயம் அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றதும் திமுகதான்.
மக்களுக்கான பொருளாதார தேவை குறித்து பேசியது ஸ்டாலின்தான்.
மிக முக்கியமான மருத்துவமனை நிலை, அதை தயார் செய்வது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின்தான் முதல் ஆளாக பேசினார்.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
கொரோனா, 144 தடை ஆகிய சூழலில் வெளியூர்வாசிகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்காமல் மக்களை சாலையில் நிறுத்தியிருக்கிறது அரசு. பேருந்துகளைக் குறைத்தால் எப்படி ஊருக்குச் செல்வார்கள் என்கிற எண்ணம் கூடவா இல்லை? உடனே பேருந்துகளை அதிகரித்து, மக்களுக்கு இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும், என்று கூறினார். கூட்டம் அதிகம் ஆனால் கொரோனா பரவும் என்பதால் அப்படி கூறினார்.

சம்பளம் குறித்து பேசினார்
அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத் தேவைக்கான நிதியுதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனமும், அக்கறையும் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும், என்று கூறினார். ஊழியர்கள் மாத சம்பளம் குறித்து பேசிய முதல் கட்சி திமுகதான்.

தேர்வுகள் எப்படி
மேலும், 11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து கொரோனா அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா?மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும், என்று மாணவர்களின் நலன் குறித்தும் திமுகதான் பேசியது. அதிமுக இன்னும் இதில் பிடிவாதமாக இருக்கிறது.
தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்றும் ஸ்டாலின்தான் வலியுறுத்தினார்.

தற்போது சமமான ஆதரவு உள்ளது
இதுதான் தமிழக அரசியலை மாற்றும் என்று கணிக்கப்படுகிறது. திமுக தற்போது நல்ல எதிர்க்கட்சியாக சரியான ஆலோசனைகளை சரியான நேரத்தில் வழங்கி வருகிறது. அதிமுகவும் தாமதமாக முடிவு எடுத்தாலும் துணிச்சலாக முடிவுகளை எடுத்து வருகிறது. இரண்டு கட்சிகளும் இந்த அரசியல் ஆட்டத்தில் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த அரசியல் ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்க போவது திமுகவோ, அதிமுகவோ அல்ல.. கொரோனாதான்!












Click it and Unblock the Notifications