நீதித்துறை மீதான களங்கத்தை உச்ச நீதிமன்றம் துடைத்துள்ளது.. ராகுல் வழக்கு தீர்ப்பு பற்றி முத்தரசன்!
சென்னை: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வரலாற்றில் சூரத் நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்ச நீதிமன்றம் துடைத்து தூய்மைப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 தேர்தலின்போது ராகுல் காந்தி மோடி குறித்துப் பேசிய பேச்சு சர்ச்சையானது. இது தொடர்பாக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் தனது எம்.பி பதவியை இழந்தார் ராகுல்.

ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த நிலையில், குஜராத் ஐகோர்ட் முந்தைய தீர்ப்பை செய்தது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் தனது எம்பி பதவியைப் பெறுகிறார். ராகுல் காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நாடு முழுவதும் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு தேர்தல் கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து கூறிய கருத்தை, குஜராத் பாஜகவினர், திரித்து, வழக்காக பதிவு செய்து சூரத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தி, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபதாரமும் விதிக்கும் உத்தரவு பெற்றனர்.
இந்த அநியாய உத்தரவு வழங்கிய நீதித்துறை நடுவருக்கு பதவி உயர்வு வழங்கி கொண்டாட முனைந்தது உச்ச நீதிமன்றம் தலையீட்டால் தடுக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீடு கடந்த ஜூலை 7 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என்ற கருத்து கட்டமைக்கப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நியாயம் கோரினார். அவரது முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் "ராகுல் காந்திக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபதாரம் என்ற தண்டனைக்கு தடை விதித்துள்ளது. இந்த உத்தரவு தனி நபரின் உரிமைக்கு மட்டும் பாதகமாக அமையவில்லை. தொகுதி மக்களின் தேர்ந்தெடுக்கும் உரிமையினையும் பாதித்துள்ளது" என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் சூரத் கீழமை நீதிமன்றம் தனது அதிகார எல்லை தாண்டி, அதன் எதிர்விளைவுகள் குறித்து கருத்தில் கொள்ளாது, ஒரு சார்பு நிலையில் நின்று, யாருடைய விருப்பத்தையோ நிறைவேற்ற முனைந்துள்ளது. நீதிமன்ற வரலாற்றில் சூரத் கீழமை நீதிமன்றம் ஏற்படுத்திய களங்கத்தை உச்ச நீதிமன்றம் துடைத்து தூய்மைப்படுத்தியுள்ளது.
இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வரவேற்பதுடன ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களவையில், வயநாடு தொகுதி மக்கள் பிரதிநிதியாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications