சில காக்கி உடைக்குள் காவி உணர்வா? மதச்சார்பற்ற கோட்பாடுகளை அரசு உறுதி செய்ய வேண்டும்- சிபிஎம்
சென்னை: கோவையில் காந்தி நினைவு நாளையொட்டி நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தேச தந்தையாகக் கருதப்படும் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸின் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

காந்தி நினைவு நாள்
சென்னையில் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே காந்தி புகைப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல நாடு முழுவதும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள் காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்படி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கோவையில் வாக்குவாதம்
கோவையில் சிவா நந்தா காலெனியில் காந்தியடிகள் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.. அங்கு வைக்கப்பட்ட பேனரில் "இந்து மத வெறியர்களால் கொல்லப்பட்ட" என்று வாசகத்தை மறைக்குமாறு அங்கிருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாசகத்தை மறைக்க அரசியல் கட்சிகள் ஒப்புக்கொண்டன. அப்போது உறுதிமொழி ஏற்கும் போது ஆர்எஸ்எஸால் காந்தி கொல்லப்பட்டார் எனக் கூறிய போது மீண்டும் போலீசாருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிபிஎம் கண்டனம்
இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிபிஎம், சில காக்கி உடைக்குள் காவி உணர்வா என்று கேள்வி எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30-ம் தேதி கோவை மாவட்ட மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் சிவானந்த்தா காலணியில், காந்தி நினைவு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்தபோதே, 'காந்தியைக் கொலை செய்தது கோட்சே' என்கிற பகுதியை வாசிப்பதற்கு இடையூறாக மாநகர காவல்துறை துணை ஆணையரும், காவல்துறை ஆய்வாளரும் பாதியில் தடுத்தனர்.

முயற்சி ஏன்
காந்தியை கொலை செய்தது கோட்சே என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. நீதிமன்றமே அவருக்கு தூக்குத் தண்டனை கொடுத்துள்ளது. காவல்துறை அந்த வாசகத்தை எதிர்த்து இடையூறு செய்வது சரியல்ல என்று ஜி.ராமகிருஷ்ணன் பலமுறை தெரிவித்தும் வாக்குவாதத்தை அதிகாரிகள் நிறுத்தவில்லை. நிகழ்ச்சி நடக்கும்போதே காவலர்கள் சென்று பாதியில் இடையூறு செய்தது மிகத் தவறான நடவடிக்கை. காந்தியை சுட்டுக் கொலை செய்தது கோட்சேதான் என்ற உண்மையை மறைப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் ஏன் முயற்சிக்க வேண்டும்? கோவை சம்பவம் குறித்து காவல்துறை உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைவரும் மதச்சார்பற்ற கோட்பாடுகளை உறுதியாக கடைபிடிப்பதை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications