இந்துக்களா இல்லனா நுழைய கூடாதா? ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு.. சிபிஎம் வலியுறுத்தல்
சென்னை: பழனி மலை முருகன் கோயிலில் இந்துக்கள் அல்லாதோர் கோயிலுக்குள் நுழைய கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், இந்த பலகை அகற்றப்பட்டது. ஆனால், நீதிமன்றம் பலகையை வைக்க அனுமதியளித்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேல் முறையீடு செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடுதான் பழனி மலை. தரையிலிருந்து சுமார் 960 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையின் உச்சியில் முருகன் எழுந்தருளியுள்ளார். இங்குள்ள சிலையை போகர் எனும் சித்தர் உருவாக்கியதாகவும், இக்கோயில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகவும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் என மூன்று விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாட்களில் வெளி மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். மற்ற நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால் கோயிலை நிதானமாக சுற்றி பார்க்க முடியும் என ஓரளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எப்படி இருப்பினும் பக்தர்களின் வருகை இருந்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், மாற்று மதத்தை சேர்ந்த இருவர் கோயிலுக்குள் வின்ச் ரயில் மூலம் நுழைய முயன்றுள்ளனர்.
இதனை பார்த்த இந்து அமைப்பினர் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கேள்வியெழுப்பியுள்ளனர். இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் போர்டு ஒன்று வைக்கப்பட்டது. அதில், "இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், வெளி மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளில் வேறு மதத்தினர் இருப்பார்கள். அப்படி இருக்கையில் அவர்களை வரவேண்டாம் என தடுக்க இதுபோன்ற பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறதே இது எப்படி நியாம்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து பலகை அகற்றப்பட்டது. ஆனால் அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று கூறி சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினர்.
அறநிலையத்துறை சட்டம் 1947 விதி 48ன் படி இந்து அல்லாதோர் பழனி கோயிலில் நுழைய தடை விதிக்க வழிவகை செய்யும் ஆணை தெளிவாக உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, அறிவிப்பு பதாகை நீக்கப்பட்டது ஏன் என கேள்வி, தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம் எனக்கூறி அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அதன் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் வழிபாட்டு நிலையங்களாக உள்ள கோவில்களை தங்களது மதவெறி அரசியலுக்கு பாஜக பயன்படுத்துவது அன்றாடம் அதிகரித்து வருகிறது. பழனி கோயிலில் தேவையற்ற பிரச்சனைகளை கிளப்பி போராட்டங்களை நடத்தி வருகிறது.
இக்கோயிலுக்குள் இந்துக்கள் அல்லாதோர்களை அனுமதிக்க தடை விதித்து போர்டு வைக்க வேண்டுமென கலகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் இந்துக்கள் அல்லாத பிற மதத்தினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென தீர்ப்பு அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் வழிபாட்டு நிலையங்களில் அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் அமைதியாக செல்வதும், வழிபடுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் பழனி கோயிலில் பிற மதத்தினர் நுழைவதை தடை செய்வது மத அடிப்படையிலான முரண்பாட்டை உருவாக்கிவிடும்.
1947ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட கோவில் நுழைவு சட்ட விதியை சுட்டிக்காட்டி மேற்கண்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தில் இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதியினரும் கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும், சாதி அடிப்படையில் யாரையும் தடுக்கக் கூடாது என்றுதான் தெளிவுபடுத்துகிறது. இதர மதத்தினர் கோவிலுக்குள் வருவதற்கு இச்சட்டம் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, தமிழக அரசு இத்தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் " என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications