தூத்துக்குடி டூ சென்னை வந்த விமானம்.. நடுவானில் நடந்த திக் சம்பவம்.. பதறிப்போன பயணிகள்
சென்னை: தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 75 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த போது, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விரிசல் ஏற்பட்டிருப்பதை விமானி கவனித்துள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அவர் கொடுத்த தகவலின் பேரில் பாதுகாப்பாக, பத்திரமாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று இண்டிகோ விமானம் ஒன்று சென்னைக்குப் புறப்பட தயாராக இருந்தது. 6E1607 என்ற ஏ.டி.ஆர் ரக விமானத்தில் 75 பயணிகள் இருந்தனர். விமானம் இன்று மாலை தூத்துக்குடியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டது.

சென்னை வந்த இண்டிகோ விமானம்
வானில் பறந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்கும்போது, விமானி விமானத்தின் முன்பகுதியில் உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கவனித்துள்ளார். இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் முதன்மை முன்னுரிமை அடிப்படையில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தை சென்னை விமான நிலையத்தில் முதலில் தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் 75 பேரும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
கண்ணாடியில் விரிசல்
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இப்படி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இது பற்றி விசாரணையை தொடங்கினர். இது பற்றி அதிகாரிகள் கூறுகையில், "இது அவசர நிலை அல்ல.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், எந்தவித அவசர அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. விமானம் சுமூகமாக தரையிறங்கியது" என்று தெரிவித்தனர். எப்படி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது என்பது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அதிகாரிகள், "விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்" என்று கூறினர்.
தொழில்நுட்ப குழுக்கள் ஆய்வு
இதன் பின்னர், விமானம் ஆய்வு செய்வதற்காக 'பே 51'க்கு மாற்றப்பட்டது. அத்தியாவசிய ஆய்வுகள் மற்றும் அனுமதி கிடைத்த பிறகுதான் மீண்டும் இந்த விமானம் சேவைக்கு பயன்படுத்தப்படும். "எங்கள் பயணிகளுக்கும், பணியாளர்களுக்கும் பாதுகாப்புதான் முதன்மையான முன்னுரிமை" என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது விரிசல் எப்படி ஏற்பட்டது, என்பது குறித்து விசாரிக்க தொழில்நுட்பக் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
4 நாட்களில் இரண்டாவது சம்பவம்
கடந்த நான்கு நாட்களில் இண்டிகோ விமானம் தொடர்பான இரண்டாவது சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னர், மதுரையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏ.டி.ஆர் விமானத்திலும் இதேபோன்ற கண்ணாடி விரிசல் ஏற்பட்டது. அந்த விமானமும் சென்னையில் பாதுகாப்பாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. இரு சம்பவங்களிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications