கடலூர் ரயில் விபத்து: உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபந்து நடந்துள்ளது.

வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி, ஒரு மாணவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், வேன் தண்டவாளத்தை கடந்தபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (8-7-2025) காலை நடந்த மோசமான ரெயில் விபத்தில் விலை மதிப்பில்லாத இரண்டு இளம் பிள்ளைகளின் உயிர் பறிபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். வாழ வேண்டிய வயதில் உயிரிழந்த அந்தத் துளிர்களின் மரணம் என்னை ஆற்றொன்னாத் துயரில் ஆழ்த்துகிறது.
விபத்தில் உயிரிழந்த நிமிலேஷ் (வயது 12), த/பெ விஜயசந்திரகுமார்) மற்றும் சாருமதி (வயது 16), த/பெ .திராவிடமணி) ஆகிய இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு நபர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்திடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications