டச் பண்ணாதீங்க.. தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி… எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்
சென்னை: வேலை தேடும் நபர்களை குறிவைத்து புதுவகை மோசடி அரங்கேறி வருகிறது. வெளிநாட்டில் இருந்து வேலை கொடுப்பதாக கூறி ஒர்க் ஃப்ரம் ஹோம் என்று சொல்லி ஆன்லைன் மூலம் நம்முடைய பணத்திற்கு ஆப்பு வைக்கின்றது தில்லாலங்கடி மோசடி கும்பல். இதுபோன்ற மோசடி நபர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருத்தரை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவரது ஆசையை தூண்ட வேண்டும் என்று சொல்வார்கள். இன்றைக்கு பணத்தை திருடும் மோசடி கும்பல் பலரும் ஆன்லைனில் பலருக்கும் ஆசையை விதைத்து ஏமாந்த நேரத்தில் பணத்தை அறுவடை செய்து விடுகின்றன. ஆன்லைன் லோன் ஆப்கள் ஒருபக்கம் ஏற்றி வருகிறது என்றால் இப்பொது புதுவிதமாக வேலை தேடுபவர்களை குறிவைத்துள்ளது மற்றொரு கும்பல். குறிப்பாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க நினைப்பவர்களை குறி வைத்து இந்த மோசடி கும்பல் ஆன்லைன் மூலம் வலை விரிக்கிறது.

இந்த மோசடி கும்பல் பற்றி சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இணையதளத்தில் பண மோசடி செய்து வரும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்கள். உங்களின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப்பிற்கு ஒரு லிங்க் உடன் தகவல் அனுப்புகிறார்கள். அதில் நீங்கள் வேலை தேடும் நபர் என்பதை அறிகிறோம், எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது அதில் உங்களுக்கு பணியாற்ற விருப்பம் இருந்தால் வீட்டில் இருந்தபடியே தினமும் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்த லிங்கை தொட்டால் telegram செயலியில் உள்ள குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதன்பிறகு எங்கள் நிறுவனத்தில் இணைந்ததற்கு நன்றி நாங்கள் பதினைந்து வகையான மிகவும் எளிதான டாஸ்க்குகளை தருகிறோம் அதில் வெற்றி பெற்றால் 30 சதவீதம் கமிஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்பணமாக 500 ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்புகிறோம் எனவும் உங்கள் வங்கி கணக்கு ஐஎஃப்எஸ்சி கோட் உள்ளிட்ட விவரங்களை அனுப்பும்படி கேட்கிறார்கள். அதன் பிறகு ஆயிரம் ரூபாய் செலுத்துங்கள் கமிஷன் தொகையுடன் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறி முன்பணம் கொடுத்த பிறகு உங்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டி விட்டு தொடர்பை துண்டித்து விடுவார்கள்.
இந்த மோசடி அதிக அளவு பெண்கள் மற்றும் வேலை தேடும் வரை குறி வைத்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பல மோசடி தொடர்பாக உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆன்லைனில் வேலை தேடும் நபர்கள் கவனமாக இருங்கள். நம்பகமான நிறுவனமாக இருந்தால் மட்டுமே உங்களைப் பற்றி தகவல்களை உள்ளிடுங்கள். எந்த நிறுவனமும் இன்டர்வியூவின் போதே உங்களின் வங்கி கணக்கு எண், ஐஎப்எசி உள்ளிட்ட விபரங்களை கேட்க மாட்டார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்












Click it and Unblock the Notifications