6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்-.12 மணிநேரத்தில் மேலும் தீவிரமாகும்- வானிலை மையம்
சென்னை: வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிவர் புயல் அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக வலுவடைந்து இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயலானது நேற்று 5 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி நகரத் தொடங்கியது. ஆனால் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் 3 மணிநேரமாக ஒரே இடத்திலேயே நிவர் புயல் மையம் கொண்டிருந்தது.
பின்னர் மணிக்கு 5 கி.மீ.வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்தது நிவர் புயல். இதனால் இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட புயல் இன்று இரவுதான் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நிவர் புயல் நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

6 மணிநேரமாக 6 கி.மீ வேகம்
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 6 மணிநேரமாக 6 கி.மீ. வேகத்தில் நகருகிறது. கடலூருக்கு கிழக்கு- தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவில் இது நகர்ந்து வருகிறது.

எந்த இடத்தில் நிவர்?
புதுச்சேரிக்கு கிழக்கு- தென்கிழக்க்கில் 310 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கில் 370 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருகிறது நிவர் புயல். அடுத்த 12 மணிநேரத்தில் மேலும் தீவிர புயலாக நிவர் புயல் வலுவடையும்.

இன்று இரவு கரையை கடக்கும்
அடுத்த 6 மணி நேரத்துக்கு மேற்கு- தென்மேற்கு திசையிலும் பின்னர் வடமேற்கு திசையை நோக்கியும் நிவர் புயல் நகரும். பின்னர் இன்று (நவ.25) இரவு தமிழகம்- புதுவை கடலோரத்தில் அதாவது காரைக்கால்- மாமல்லபுரம் இடையே நிவர் புயல் கரையை கடக்கும்.

உக்கிரமான புயல் காற்று
நிவர் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 120, 130 கி.மீ முதல் 145 கி.மீ. வரையில் புயல் காற்று வீசக் கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications