முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் நாசர்.. பால் தட்டுப்பாடு.. பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை!
முதலமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை : பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஆவின் பால் உற்பத்தி குறைந்து கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆவின் பால் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பால் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விலை அவ்வப்போது உயர்ந்து வரும் நிலையில், பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், ஆவின் நிறுவனத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டலினை சந்தித்து, பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்குப் பிறகு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் நாசர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக நேற்று, கூட்டுறவு சங்கங்களின் பால் உற்பத்தி விதிகளை மீறி, அண்டை மாநிலங்களுக்குப் பால் விற்பனை செய்த 2,000 சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய விளக்கம் அளிக்காவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பால் கூட்டுறவு சங்கங்கள் கலைக்கப்படும் என அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications