தமிழகத்தை உலுக்கிய மேலவளவு முருகேசன் உட்பட 7 தலித் படுகொலைதான் தனுஷ் நடிக்கும் 'கர்ணன்' கதை?
சென்னை: தமிழகத்தை உலுக்கிய மேலவளவு முருகேசன் உட்பட 7 தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்தான் இயக்குநர் மாரி செல்வராஜ் நடிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
1999-ம் ஆண்டு ஜூலை 23-ந் தேதி.. திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஒருநாள் கூலியை ரூ150 உயர்த்தி கோரி போராட்டம் நடத்தினார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் தடியடியில் இருந்து தப்பிக்க தாமிரபரணி நதியில் குதித்தனர் பொதுமக்கள். இந்த கொடூர தாக்குதலில் ஒரு வயது பிஞ்சு குழந்தை உட்பட 17 பேர் பலியாகினர்.

- தமிழகத்தை அன்று அதிரவைத்த இந்த தாமிரபரணி நதி படுகொலை சம்பவத்தில் சிறுவனாக பங்கேற்றவன் நான் என வாக்குமூலம் கொடுத்திருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
பத்திரிகையாளரான மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குநராக உருவெடுத்தார். ஜாதிய ஒடுக்குமுறையின் உச்ச கொடூரத்தை எந்த தரப்பையும் பாதிக்காத வகையில் மக்களுக்கு எளிதாக உரைக்கும் மொழியில் சொல்லி அதிர்வுகளை கொடுத்தவர் மாரி செல்வராஜ்.
இதனைத் தொடர்ந்து தற்போது கர்ணன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இயக்குநர் வெற்றி மாறனின் அசுரன் திரைப்படத்திலும் ஜாதிய கொடுமையின் தாண்டவத்தை ஆழப் பதிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் தனுஷ்.
தற்போது கர்ணன் திரைப்படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் மிகப் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கண்டா வரச் சொல்லுங்க பாடலின் கடைசியில் நடிகர் தனுஷின் கதாபாத்திர உருவம் ஓவியமாக காட்டப்படுகிறது. அந்த ஓவியத்தை பார்த்தால் சட்டென மேலவளவு முருகேசன் நினைவுதான் வருகிறது. மேலவளவு முருகேசன் கதையைத்தான் மாரி செல்வராஜ் படமாக்கி இருக்கிறாரோ என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது.
யார் இந்த மேலவளவு முருகேசன்?
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலளவு கிராமம். இந்த மேலவளவு ஊராட்சி தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தலித்துகள் ஊராட்சி தேர்தலில் போட்டியிட ஆதிக்க ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் 1996 உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை உருவானது. பின்னர் நடத்தப்பட்ட மேலவளவு ஊராட்சி தேர்தலில் முருகேசன் வெற்றி பெற்றார். இருந்தபோதும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என அரசிடம் மனு கொடுத்திருந்தனர் மேலளவு முருகேசனும் அவரது ஆதரவாளர்களும்.
இந்த நிலையில் 1997-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்துவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது மேலவளவு முருகேசனும் அவரது ஆதரவாளர்கள் 6 பேரும் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டில் நன்னடத்தை காரணமாக இவர்களில் 3 பேர் சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 2019-ல் எஞ்சியவர்களும் விடுதலையாகினர். இந்த விடுதலைக்கு எதிரான வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications