“சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் தான் இந்த நிலை”.. ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
சென்னை: "சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர். வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது" எனப் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், "அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, பாரதத் தாயின் மகன். மிகவும் உயர்ந்த, ஆளுமை நிறைந்த மனிதர் அம்பேத்கர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர். கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்.
அவர் வெறும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே தலைவர் இல்லை. அவர் பாரதியின் பெருமைக்குரிய மகனும் கூட. நமது பட்டியலின சகோதர, சகோதரிகள் இதுவரை வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தபட்டு வருகின்றனர்.அம்பேத்கர் கண்ட கனவு இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் சமூக நீதிக்கான அவரது கனவு, சமூக நீதிக்கான குரல் அதிகமாக கேட்கும் தமிழ்நாட்டில் நிறைவேறாமல் போனது. தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தலித்துகள் மீதான மனிதாபிமானமற்ற அட்டூழியங்கள் பற்றிய செய்திகளை நாம் படிக்கிறோம்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சமூக நீதி குறித்து பேசுகின்றனர். சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் அதிகார வர்க்கத்துடன் தொடர்புடைய கள்ளச்சாராய மாஃபியாக்களால் பரிதாபமாக தலித் மக்கள் உயிரிழந்தனர். வேங்கை வயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது.
வறுமை காரணமாக அவர்களின் குழந்தைகள் மோசமான கற்பித்தல் தரத்துக்கும் கற்றலுக்கும் பெயர் பெற்ற மாநில அரசு பள்ளிகளில் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களுக்கு நல்ல கல்வியும் கண்ணியமான எதிர்காலமும் எவ்வாறு கிடைக்காமல் போகிறது." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications