“நாங்க என்ன தப்பு பண்ணோம்?” எஸ்.ஐ தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் கவலை.. வயது வரம்பை தளர்த்த கோரிக்கை!
சென்னை: 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ தேர்வுக்கு தயாராகி வந்த பலர் கால தாமதத்தால் வயது வரம்பு கடந்ததால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே வயதில் தளர்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும் காவல் சார்பு ஆய்வாளர்கள் (SI) (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான நேரடி தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,299 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

கல்வித் தகுதி
ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கீழ் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு 20 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதன்படி 2.7.1995 முதல் 1.7.2005க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 1.7.2025ன் கணக்கின்படி 30 வயது பூர்த்தியாகாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
வயது வரம்பில் வகுப்பு பிரிவுகளுக்கு தளர்வு உண்டு. வயது வரம்பு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 வயது வரையும், திருநங்கைகளுக்கு 35 வயது வரையும், கணவரால் கைவிடப்பட்டவர்கள் 37 வயது வரையும் இருக்கலாம். முன்னாள் ராணுவத்தினர்கள் 47 வயது வரையும், துறை சார்ந்தவர்கள் 47 வயது வரையும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் கவலை
சில ஆண்டுகளாக இத்தேர்வுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் தயாராக இருந்தவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம் இவர்களில் பலர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூனில் எஸ்.ஐ தேர்வு அறிவிக்கப்படும் என மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் ஜூனில் அறிவிப்பு வெளியாகவில்லை.
வயது வரம்பில் தளர்வு - கோரிக்கை
9 மாத தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனவே பலருக்கு விண்ணப்பிப்பதற்கான வயதைக் கடந்து விட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வயது தளர்வு அளிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றத்திலும் சிலர் வழக்கு தொடுத்துள்ளனர்.
இட ஒதுக்கீடு விதிகள்
தற்போதுள்ள விதிகளின்படி, வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், பற்றாக்குறை காலிப்பணியிடங்களைத் தவிர அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதார்களுக்கான இடஒதுக்கீடு விவரங்களை அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை ஒதுக்கீடு - தாலுகா மற்றும் ஆயுத படையில் தலா 20 சதவீத காலிப்பணியிடங்கள்
சார்ந்துள்ள வாரிசுதாரருக்கான ஒதுக்கீடு - மீதமுள்ள 80 சதவீத காலிப்பணியிடங்களில் 10 சதவீதம் (9 +1)
விளையாட்டு ஒதுக்கீடு - மீதமுள்ள 80 சதவீத காலிப்பணியிடங்களில் 10 சதவீதம்.
சம்பள விவரம்
காவல் சார்பு ஆய்வாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
எஸ்.ஐ பணியிடங்களுக்கு பொது விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சான்றிதழ் சாரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள்.
இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnusrb.tn.gov.in/ என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன்வ் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விரிவான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications