காங்கிரசை தூக்கி சுமக்கும் திமுக? கூட்டணி மட்டும் இல்லையென்றால் தேசிய அளவில் வாஷ் அவுட்? அவலம்!
சென்னை: டெல்லியில் ஹாட் ட்ரிக் டக் ஆகி உள்ளது காங்கிரஸ் கட்சி. இங்கிலாந்து பவுலர்களிடம் 2000 நடுப்பகுதியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவது போல வரிசையாக 3 தேர்தலில் காங்கிரஸ் 0 இடங்களை எடுத்து டக் அவுட் ஆகி உள்ளது. காங்கிரசின் இந்த தோல்வி வேறு ஒரு கேள்வியை எழுப்புகிறது.. கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் இல்லையா? என்ற கேள்விதான் அது.
ஆம் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வைத்து இருந்தால் வென்று இருக்கலாம். இந்திய கூட்டணி தொடர்ந்திருந்தால் வென்று இருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. டெல்லியில் பாஜக வென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸின் வாக்குகள்தான் வெற்றியை தீர்மானித்துள்ளன. அதாவது 13 தொகுதிகளில் பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் உதவி உள்ளது.

தோற்ற ஆம் ஆத்மி - வென்ற பாஜக இடையிலான வாக்கு வித்தியாசத்தை விட காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதன் அர்த்தம் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி வைத்து இருந்தால் வென்று இருக்கலாம். ஆனால் காங்கிரசுக்கு ஈகோ.. ஆம் ஆத்மிக்கு ஈகோ.
இந்த ஈகோ மற்ற மாநிலங்களிலும் காங்கிரசுக்கு உள்ளது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்திடம் காங்கிரஸ் இறங்கி போய் இருக்கலாம். ஆனால் மறுத்துவிட்டது.
ஆந்திர பிரதேசத்தில் நட்பாக இருந்த சந்திரபாபு நாயுடுவை பகைத்து அவரை பாஜக கூட்டணி பக்கம் செல்ல காரணமாக மாறியது. ஜெகன் மோகன் ரெட்டியுடன் அங்கே கூட்டணி வைத்தாவது இருக்கலாம் அதற்கும் முயலவில்லை.
மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி இருந்தும் கூட காங்கிரஸ் நிர்வாகிகள் தேசியவாத காங்கிரசின் சரத் பவார் அணிக்கோ.. அல்லது சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணிக்கோ வேலை பார்க்கவில்லை.
காங்கிரஸ் இப்போதும் வலுவாக இருக்கிறது என்றால் அது ஜார்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகா மட்டுமே. கேரளாவில் உட்கட்சி பூசல் கடுமையாக உள்ளது. ஜார்கண்டில் கூட்டணி உள்ளது. கர்நாடகாவிலும் உட்கட்சி பூசல் மிக கடுமையாக உள்ளது.
தமிழ்நாடு மட்டுமே திமுகவின் தயவால் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. காங்கிரசை திமுக இங்கே விட்டுக்கொடுக்காது. ஏனென்றால் சிறுபான்மையினர் வாக்குகள் காங்கிரஸ் உள்ள பக்கம் மட்டுமே இங்கே செல்லும். இதனால் திமுக காங்கிரசை விட்டுக்கொடுக்காது. அதை தாண்டி ராகுல் - ஸ்டாலின் இடையிலான bromance காரணம்.
இதை தாண்டி காங்கிரஸ் வேறு எந்த மாநிலத்திலும் வலுவான வெற்றி கூட்டணியை அமைக்க முடியவில்லை. பல கசப்புகள் வந்தாலும் கூட்டணி உடையாமல் ஸ்டாலின் பார்த்துக்கொள்கிறார். இதேபோன்ற கூட்டணியை ஜெகன் உடனோ.. மமதா உடனோ.. கெஜ்ரிவால் உடனோ காங்கிரசால் வைக்க முடியவில்லை.
காங்கிரஸ் கட்சி இனியும் தேசிய கட்சி என்ற பந்தாவில் இருந்து இறங்கி போக வேண்டும். மாநில கட்சிகளின் குரலை கேட்க வேண்டும். அவர்களின் கைபிடித்து நடக்க வேண்டும்.. அப்போது மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்ற குரல்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னமும் "ஆண்ட பரம்பரை" எண்ணத்தில் காங்கிரஸ் வலம் வந்தால்.. பாஜகவை இப்போதைக்கு காங்கிரசால் வீழ்த்தவே முடியாது என்பதே நிதர்சனம்! காங்கிரஸின் இப்போதைய தேவை தலைமை என்பதை தாண்டி.. நல்ல தோழமையே!












Click it and Unblock the Notifications