பழைய கார் வாங்கப் போறீங்களா? ஜெயிலுக்கு போயிடுவீங்க! காரை வாங்கும் போது ‘இவையெல்லாம்’ முக்கியம்!
சென்னை: டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் பிடிபடுவதற்கு முக்கிய துருப்புச் சீட்டாக இருந்தது கார் தான்.. ஆனால் அந்த காரை விற்றவர் முறையாக ஆவணங்கள் இன்றி, பெயரை மாற்றாமல் விற்றதால் பலர் சிக்க வேண்டியிருந்தது. உண்மையில் முறையான ஆவணங்கள் இன்றி காரை விற்று, அவர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால் உரிமையாளரும் கைது செய்யப்படும் வாய்ப்புகள் உண்டு. எனவே, கார் வாங்கும் போதும், விற்கும் போதும் மக்கள் கவனிக்க வேண்டியவை என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்..
பயன்படுத்திய காரை விற்பனை செய்வது, சாதாரண பண பரிவர்த்தனை போல் தோன்றினாலும், அதன் பின்னால் மிகவும் முக்கியமான சட்ட நடைமுறைகள் இருப்பதைக் கார் உரிமையாளர்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை.
"காரை விற்றுவிட்டோம்... அதற்குப் பிறகு பெயர் மாற்றம் வாங்குபவர் பொறுப்பு" என்ற எண்ணமே பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த சிந்தனைப் பெரும் ஆபத்தை உருவாக்கக்கூடியது என்பதை அண்மையில் நடந்த டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு சம்பவம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.

டெல்லி கார் குண்டுவெடிப்பு
அந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஐ-20 காரின் உரிமை பலமுறை கைகள் மாறியிருந்தது. ஆனால் பெயர் மாற்றம் எங்கும் செய்யப்படவில்லை. இதனால் முன்னாள் உரிமையாளர்கள் வரை விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். "நாங்கள் விற்றுவிட்டோம்" என்ற விளக்கம் போலீசுக்கு போதவில்லை. ஏனெனில் சட்டப்படி, ஆவணங்களில் யாரின் பெயர் உள்ளதோ அவர் தான் வாகனத்தின் உரிமையாளர். அது குற்றத்தில் பயன்படுத்தப்பட்டால், முதலில் சந்தேக நபராக கருதப்படுவது அந்த ஓனர் தான்.
கார் விற்பனை
இந்த ஒரு நிகழ்வே, பெயர் மாற்றம் செய்யாமல் கார் விற்பனையால் ஏற்படும் ஆபத்துகளை அப்பட்டமாகக் காட்டுகிறது. பயன்படுத்திய வாகனங்களை விற்பனை செய்வோர், "பணம் பெற்று காரை விற்று விட்டோம்.. மீதியெல்லாம் வாங்குபவர் பார்த்துக்கொள்ளட்டும்" என நினைப்பார்கள். ஆனால், காரை வாங்கியவர் தவறானவராக இருந்தால், அல்லது பின்னர் அந்த வாகனம் குற்றத்தில் பயன்படுத்தப்பட்டால், முதலில் சிக்கப் போவது முன்னாள் உரிமையாளர்தான். வாங்குபவர் காணாமல் போனாலோ, அடையாளம் சரியாகத் தெரியாவிட்டாலோ, பழைய உரிமையாளர் மீது வழக்கு கூட தொடரப்படலாம்.
பெயர் மாற்றம்
வாங்குபவர்களுக்கும் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். கார் பெயர் மாற்றம் செய்யப்படாவிட்டால், பழைய உரிமையாளரின் மீது உள்ள அபராதங்கள், பென்டிங் விதிமீறல்கள், கடன் வழக்குகள் எல்லாம் புதிய உரிமையாளரையும் பாதிக்கும். எனவே, வாகனத்தின் உரிமை மாற்றம் என்பது இருபக்கத்தவருக்கும் பாதுகாப்பு கவசம் போன்றது.
சட்ட பிரச்சனை
ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது? இரண்டாம் தர கார் விற்பனை மையங்கள், புதிய வாடிக்கையாளர் கிடைக்கும் வரை பெயர் மாற்றத்தை தள்ளிப் போடுகிறார்கள். சிலர் மாதங்கள், ஆண்டுகள் கூட பெயர் மாற்றம் செய்யாமல் காரை ஓட்டுகின்றனர். இதுதான் பின்னர் தான் பெரிய பிரச்சினையைக் கிளம்புகிறது. ஆவணங்களில் பெயர் யாருடையதோ, வாகனம் அவ்வாறே சட்டப்படி அவருடையது. ஆகவே, குற்றம் நடந்தால் பொறுப்பும் அவருக்கே என்கின்றனர் போக்குவரத்து துறை அதிகாரிகள்.
ஆவண சரிபார்ப்பு
விற்பனை செய்யும் முன் கடன் முடித்தல், ஆவணங்களை முழுமையாக கொடுத்தல், காப்பீடுகளை மாற்றுதல், படிவம் 29 மற்றும் 30-ஐப் பூர்த்தி செய்தல் போன்றவை வழக்கமான நடைமுறைகளை செய்ய வேண்டும். அதைவிட முக்கியமானது, கார் புதிய உரிமையாளரின் பெயரில் RTO-வில் பதிவு செய்யப்பட்டு, SMS, அபராத தகவல்கள் அனைத்தும் புதிதாக வாங்குபவருக்கே வரும்படி செய்துகொள்வதே நல்லது. மேலும், கார் வாங்கும் போது, குற்றங்களில் பதிவான வாகனங்கள், ஆவணங்கள் இல்லாமல் மாறும் வாகனங்கள் ஆகியவை சந்தையில் இருக்கக் கூடும் என்பதால் அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பது அவசியம்.












Click it and Unblock the Notifications