திராவிட கட்சிகள் ரூட்டில் பாஜக ஸ்கெட்ச்- தீவிர இந்துத்துவா பேசும் ஆளுநர் ரவி..விழிபிதுங்கும் டெல்லி!
சென்னை: தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி நிற்பதற்காக திராவிட கட்சிகளைப் போல தமிழ் உணர்வுடன் தம்மை வெள்ளிப்படுத்த நினைக்கிறது தமிழ்நாடு பாஜக. ஆனால் தீவிர இந்துத்துவா கருத்துகளை ஆளுநர் ரவி பேசி வருகிறார். இதனால் பாஜகவின் வியூகங்கள் அத்தனைக்கும் முட்டுக்கட்டை விழுவதாக டெல்லிக்கு புகார் பறந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தேசிய கட்சியான காங்கிரஸ், 1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் எழவே முடியாத அளவு பலவீனமாகக் கிடக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அல்லாமல் காங்கிரஸ் கட்சியின் உயிர்ப்பை நினைத்து கூட பார்க்க முடியாது. இதற்கு காரணம், காலந்தோறும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வந்ததுதான் என்பது வரலாறு.

தமிழ்நாடு பாஜக தமிழ்நாட்டில் அறிமுகமான காலந்தொட்டே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கட்சியாகவே பார்க்கப்பட்டது. அக்கட்சியினர் செயல்பாடும் காங்கிரஸ் கட்சியைப் போலவே இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் தொடக்க காலம் முதலே அந்நியப்பட்ட கட்சியாகவே இருந்து வருகிறது. அகில இந்திய அளவிலும் மாநிலங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பாஜகவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய பின்னரே இந்த பின்னடைவில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனாலும் மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டில் ஆகப் பெரும் அதிருப்தியைத்தான் உருவாக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாடு பாஜக மட்டும் தனித்த ஒரு கட்சியாக தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலைமையை சரி செய்யத்தான் தமிழ், தமிழ்நாடு, தமிழர் பண்பாடு என பல்வேறு விவகாரங்களை பாஜக கையில் எடுத்து செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தமது உரைகளில் பெரும்பாலும் தமிழ் மொழியை சிறப்பித்து பேச தவறுவது இல்லை. அண்மையில் கூட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தியது. இப்போதும் கூட குக்கிராமங்களிலும் கூட பாஜக சென்றடையும் வகையில் பொங்கல் விழாக்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் கபடி உள்ளிட்ட தமிழர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது பாஜக. இந்த வியூகம் எல்லாம் திமுகவின் தொடக்க காலத்தில் பின்பற்றியது. அதையேதான் பாஜக இப்போது கையில் எடுத்துள்ளது. திமுக கைவிட்ட வியூகங்களை தூசு தட்டி நவினமாக்குகிறது பாஜக. அதாவது திராவிட கட்சிகளின் பாணியில் தமிழ்நாட்டில் வலுவான அடித்தளம் போட்டு வருகிறது தமிழ்நாடு பாஜக.

அதேநேரத்தில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என பெயர் இருப்பதுதான் சரியானது; பெரியார், அண்ணா, காமராஜர் பெயரை சொல்ல மறுப்பது; சனாதன தர்மத்தை வலியுறுத்துவது என தமிழ்நாடு பாஜக ஒதுக்கி வைத்திருக்கும் தீவிர இந்துத்துவா கொள்கைகளை படுதீவிரமாக பேசுகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இதனை தமிழ்நாடு பாஜகவும் வலிந்து ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அதாவது தங்களுடைய வியூகங்களுக்கு நேர் எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் இருக்கின்றன என்பதை பாஜக தலைவர்கள் அதிர்ச்சியுடன் உணர்ந்து கொண்டாலும் வேறுவழியே இல்லாமல் ஆதரித்தும் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆளுநர் ரவியின் இத்தகைய பேச்சுகள், தங்களது வியூகங்களுக்கு எதிரானதாக இருக்கிறது என்கிற தகவலையும் டெல்லிக்கு பாஸ் செய்திருக்கிறதாம் தமிழ்நாடு பாஜக. தமிழ்நாடு பாஜக ஒரு திசையில் பயணிக்க, இன்னொரு திசையில் ஆளுந ரவி பயணிக்க, டெல்லி மேலிடம் விழிபிதுங்குகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications