நயினார் நாகேந்திரனின் ’முதல்வர் தளபதி’ பேச்சு எதிரொலி-பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு டெல்லி புது கடிவாளம்!
சென்னை: தமிழக பாஜக எம்.எல்.ஏக்கள் இனி அரசு விழாக்களில் பேசும் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒருவரி கூட புகழ்ந்து பேசக் கூடாது என டெல்லி பாஜக மேலிடம் தடைவிதித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் அதிமுக இரண்டாக பிளவுபட்டு கோஷ்டி மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் மாறி மாறி வழக்குகள் தொடருகின்றன. இந்த வழக்குகளில் ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு முறை சாதகமான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதனால் தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சிக்கான வெற்றிடம் இருந்து வருகிறது. இந்தவெற்றிடத்தை எப்படியாவது நிரப்பலாம் என்ற கனவில் இருக்கிறது பாஜக. ஆனால் தமிழக பாஜகவினர் முன்வைக்கும் கேள்விகள், விவாதங்கள் முதிர்ச்சி அற்றதாக, அநாகரிகமாக இருப்பதாக விமர்சனங்கள் தொடருகின்றன.

அண்ணாமலை மீது அதிருப்தி?
அண்மையில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் தொடர்பாக மிக இழிவான விமர்சனத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அண்ணாமலையில் இந்த தரம் தாழ்ந்த காலணி விமர்சனத்தை எந்த சீனியரும் ரசிக்கவில்லை. இது தொடர்பாக டெல்லி மேலிடத்திலும் புகார் கொடுத்ததால் அண்ணாமலை வாய்ஸ் சற்று அடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அண்ணாமலைக்கு செக்
மேலும் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமது பணிகளை கவனிப்பதற்காக தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஒரு அறையை பெற்றுக் கொண்டார். இதுவும் கூட அண்ணாமலைக்கு வைக்கக் கூடிய ஒரு செக் என்றுதான் சொல்லப்பட்டு வருகிறது. இப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சுகள்தான் பாஜகவினரிடையே ஹாட் டாஃப்பிக்காக இருக்கிறது.

நயினார் பேச்சால் சர்ச்சை
நெல்லையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், மாண்புமிகு தளபதி, முத்தமிழறிஞர் கருணாநிதி என்றெல்லாம் புகழாரம் சூட்டினார். திமுகவுடன் மல்லுக்கட்டக் கூடிய ஒரு கட்சியின் எம்.எல்.ஏ. பேசுவதைப் போல இல்லாமல் திமுகவின் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ. போல இயல்பாக பேசினார் நயினார் நாகேந்திரன். இதனால்தான் பாஜகவில் திமுக ஆதரவு எம்.எல்.ஏ. அணி உருவாகிறதா? என்ற கேள்வி எழுந்தது.

டெல்லி ஃபார்மேட்
அதேநேரத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு தொடர்பாக டெல்லிக்கும் புகார்கள் பறந்தனவாம். இது குறித்து விசாரித்த டெல்லி மேலிடம் நயினார் பேச்சை ரசிக்காமல் அதிருப்தியை காட்டியதாம். இதனைத் தொடர்ந்து இனி அரசு விழாக்களுக்கு போகும் பாஜக எம்.எல்.ஏக்கள் இப்படித்தான் பேச வேண்டும் என ஒரு ஃபார்மேட்டை வாய்மொழியாக அறிவுறுத்தலாக விடுத்துள்ளதாம் டெல்லி மேலிடம்.












Click it and Unblock the Notifications