'டெல்லி' நினைத்தது நடக்கவில்லை.. விட்டுத்தராத எடப்பாடி பழனிச்சாமி.. எதிர்க்கட்சி தலைவராக தேர்வானார்
சென்னை: எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியை நியமிப்பதா, பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுப்பதா என்பதில் அதிமுக கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு வழியாக எடப்பாடி பழனிச்சாமி அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதல்வராக முக ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார்.
லாக்டவுன்...குடிமகன்கள் மூர்க்கத்தனமாக முற்றுகை...2-வது நாளாக டாஸ்மாக் மதுகடைகள் விற்பனை ரூ.428 கோடி
66 இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது அதிமுக. இந்த நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி முடிவு செய்ய, அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 7ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கருத்து மோதல்
அப்போது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் அதிமுகதான், திமுகவை விட அதிகப்படியாக வாக்கு வங்கி பெற்று அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் தென் மண்டலம், டெல்டா, வடக்கு மண்டலம் ஆகியவற்றில் அதிமுகவை விட திமுக அதிக தொகுதிகளையும் வாக்கு வங்கியையும் பெற்றுள்ளது. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்றுதான் மேற்கு மண்டல மக்கள் விரும்பி ஓட்டு போட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் தெற்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை காட்டத் தவறி விட்டார். எனவே மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்கி எதிர்க்கட்சித் தலைவர் பதவி எடப்பாடி பழனிசாமிக்குதான், வரவேண்டுமென்று வாதிட்டுள்ளனர்.
இட ஒதுக்கீடு விவகாரம்
அதேநேரம், வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கியதால்தான் தென்மாவட்டங்களில் பிற ஜாதியினர் ஒரே அணியில் திரண்டு அதிமுகவை தோற்கடித்து விட்டனர். எடப்பாடி பழனிசாமியின் முடிவுக்காக பன்னீர்செல்வம் திறமை மீது சந்தேகம் தேவையில்லை. அவர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டங்களில் கூட சில சந்தர்ப்பங்களில் முதல்வராக இருந்த நிர்வாக திறமை உள்ளவர். ஜெயலலிதா சட்ட சபைக்கு வராத காலகட்டத்தில் இவர்தான் அதிமுக குழுவை வழி நடத்தினார். எனவே இந்த அனுபவம் கொண்ட இவருக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கவேண்டும் என்று வாதிட்டுள்ளனர்.
திடீர் போர்க்கொடி
மேற்கு மண்டலத்தில் அபார வெற்றி பெற்றுள்ள அதிமுக. எனவே எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில் திடீரென ஓ பன்னீர்செல்வம் தரப்பு இந்த அளவுக்கு கடும் பிடிவாதம் காட்டுவதற்கு காரணம் இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
டெல்லி ஆதரவு
ஓ.பன்னீர்செல்வம்தான் எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்று "டெல்லி" விரும்புவதாக கூறப்படுகிறது. அங்கிருந்து கிடைத்த பாசிடிவ் சிக்னலை தொடர்ந்து தான் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உறுதியாக நிற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலின் அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து இல்லாமல் தன்னிச்சையாக அதிமுக சார்பில் ஓபிஎஸ் அறிக்கை விடும் அளவுக்கு போனதற்கும் இதுதான் காரணமாம். தர்மயுத்தம் காலத்திலும் டெல்லி ஆதரவாக இருந்ததால்தான் ஓபிஎஸ் அடித்து ஆடினார். இதன் காரணமாக தினகரன் தரப்பு அதிமுகவை விட்டு வெளியே செல்லும் சூழ்நிலை உருவானது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
பேச்சுவார்த்தை தூதுகள்
பன்னீர்செல்வம் தரப்பு திடீரென போர்க்கொடி உயர்த்தியதால் அதிர்ச்சி அடைந்த எதிர்தரப்பு முந்தைய அமைச்சரவையில் டெல்லி வரை சென்று பேச்சுவார்த்தை நடத்திய முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலமாக சென்னையில் உள்ள, டெல்லியுடன் மிக நெருக்கமாக இருக்கும் பத்திரிக்கையாளர் வழியாக தூது விட்டதாக கூறப்படுகிறது ஆனால், "பன்னீர்செல்வத்துக்கு பதவியை கொடுங்கள்" என்று அங்கிருந்து ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்கள்.
இழுபறி நிலை
எனவேதான் 7ம் தேதி எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் 10ம் தேதியான இன்றைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று ஒத்திவைக்கப்பட்டது என்றும், கூட்டம் தொடங்கி நடந்து வந்த போதிலும் இரு தரப்பிலும் மாறி மாறி தங்கள் தரப்புக்குதான் எதிர்கட்சி தலைவர் பதவியை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதால் நீண்ட நேரமாக முடிவு எட்டப்படாமல் கடைசியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த பதவி தரப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் சிலரிடம் பேசியபோது, பன்னீர்செல்வம் கடந்த நான்கு வருடங்களாக பெரிய அளவுக்கு மக்கள் மத்தியில் தோன்றி ஆதரவை பெற முயற்சி செய்யவில்லை. தனது மாவட்டத்தில் சுற்றிவந்தார். எடப்பாடி பழனிசாமிதான் அனைத்து விஷயங்களிலும் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேலும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மக்கள் மனதில் பதிவாகி விட்டார்.
திட்டம் இதுதான்
எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது, நிழல் முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள பதவி. கேபினட் அமைச்சர்களுக்கு ஈடானது. எனவே, எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த பதவி சென்று சேர்வதுதான் நியாயமாக இருக்கும். திடீரென ஓ.பன்னீர்செல்வத்தை களத்தில் இறக்கி, அதன் மூலம் அதிமுகவை வீக் செய்வதற்கு டெல்லி விரும்புகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது என்கிறார்கள். டெல்லி விருப்பத்தை அறிந்திருந்தாலும், பதவியை விடக்கூடாது என்பதில் எடப்பாடி தரப்பினர் உறுதியாக இருந்துள்ளனர். அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு அவருக்கு கிடைத்த நிலையில் வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் தரப்பு விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் தொடர்ந்து தங்கள் தரப்பே விட்டுத்தரும் நிலை இருப்பதால் அதிருப்தியில் டெல்லி வரை பஞ்சாயத்து போகக்கூடும். எனவே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.