ஈபிஎஸ் டீம் ‘டாப்’ தலைவருக்கு டெல்லி புள்ளியின் அசைன்மென்ட்? அதே நாளில் நடந்த மீட்டிங்! கேம் மாறுதே!
சென்னை : டெல்லியில் இருக்கும் அதிமுகவின் முக்கிய தலைவர் மூலம், பாஜக மேலிடம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா சென்னை வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என சீறிய அதே நாளில் தான் டெல்லியில் ஒரு முக்கியமான சந்திப்பு நடைபெற்றது.
அதிமுக மூத்த எம்.பி தம்பிதுரை, பாஜக அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்தார். தம்பிதுரை, பியூஷ் கோயலுக்கு நெருக்கமானவர் என்ற வகையில், இந்த சந்திப்பின்போது அவருக்கு முக்கியமான பணிகள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
தம்பிதுரை, அதையொட்டிய வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் ஓபிஎஸ் தரப்பினரோடு தொடர்ந்து டச்சில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விட்டு விலகும் இபிஎஸ்! பியூஷ் கோயலை சந்திக்க சம்மன் அனுப்பிய பாஜக? தம்பிதுரை சந்திப்பு பின்னணி என்ன?
அதிமுக விவகாரத்தில் பாஜக
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பிளவு விவகாரம் பல கட்ட விசாரணைகள், உத்தரவுகளுக்குப் பிறகு தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. தேர்தல் ஆணையமும் இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே, ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே, பாஜக தலைமையை நோக்கி காய்நகர்த்தி வருகின்றனர். பாஜக தலைமையின் ஆதரவு கிடைப்பவரே அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துவர் என்ற நிலையே இருக்கிறது. பாஜகவின் விருப்பம், ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனக் கூறப்படுகிறது.
மேலிடத்தின் குரல்
சமீபத்தில் மதுரை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் அருகருகே நிற்கச் செய்து வரவேற்பைப் பெற்றார். இதன்மூலம் டெல்லி மேலிடம் அதிமுகவின் ஒற்றுமையைத்தான் விரும்புகிறது என்பது பட்டவர்த்தனமானது. ஆனால் எடப்பாடி அணியின் பெரும்பாலான நிர்வாகிகள், ஓபிஎஸ் வேண்டவே வேண்டாம், ஓபிஎஸ்ஸை சேர்க்க வேண்டும் என பாஜக பிடிவாதம் பிடித்தால் பாஜகவை ஒதுக்கிவிடலாம் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்கவும் மறுத்தார்.
சீறிய எடப்பாடி
தொடர்ந்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்போதெல்லாம் நாங்கள் போய் சந்திக்க வேண்டுமா? நாங்கள் பிரதான எதிர்க்கட்சி, அவர்கள் மத்தியில் ஆட்சியில் இருக்கும் தேசியக்கட்சி. அவர்கள் அரசு நிகழ்வுக்காக வந்தால் சந்திக்கலாம், தனிப்பட்ட விஷயத்திற்காக வரும்போது சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் காட்டமாகவே தெரிவித்தார். மேலும், அதிமுக தலைமையில் தான் கூட்டணி, பாஜக எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிடாது என ஈபிஎஸ் அணி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
டெல்லியில் சந்திப்பு
எடப்பாடி வீராவேசமாகப் பேசிய அதே நாளில் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த தம்பிதுரை எம்.பி. சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி சொன்னதால்தான் பியூஷ் கோயலை சந்தித்தேன் என தம்பிதுரை கூறியிருந்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மத்திய கல்வி, மகளிர், குழந்தைகள் மேம்பாட்டு நலன், விளையாட்டுத்துறை நிலைக்குழு உறுப்பினராக தம்பிதுரை நியமிக்கப்பட்டார். முன்னதாக, மாநிலங்களவை அரசாங்க உத்தரவாதங்களுக்கான குழு தலைவராக தம்பிதுரை நியமனம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அசைன்மெண்ட்
தம்பிதுரைக்கு தொடர்ந்து பாஜக அரசு முக்கியத்துவம் அளித்தது அரசியல் அரங்கில் கவனிக்கப்பட்டது. இந்நிலையில் தான் டெல்லி தலைமை, தம்பிதுரைக்கு ஒரு முக்கியமான அசைன்மெண்ட்டை கொடுத்திருக்கிறது என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். டெல்லியில் இரண்டு முக்கிய பொறுப்புகளைப் பெற்ற தம்பிதுரை, பாஜகவின் முக்கிய தலைவர் பியூஷ் கோயலையும் சந்தித்தார் அல்லவா? அந்தச் சந்திப்பே அதிமுக விவகாரம் தொடர்பானது தான் என்கிறார்கள். அதிமுக விவகாரத்தை பியூஷ் கோயல் தான் கவனித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
பியூஷ் கோயல் + தம்பிதுரை
பியூஷ் கோயல், தம்பிதுரையிடம், ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணி இணைப்புக்கான வேலைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. தம்பிதுரையும், டெல்லியில் இருந்து தமிழகம் வந்ததுமே அதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் என்கிறார்கள். இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் தம்பிதுரை எம்.பி ஈடுபட்டு வருவதாகப் பேசப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
தம்பிதுரை ஆதரவாளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தம்பிதுரையின் ஆதரவாளராக இருந்து வரும் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கினார் ஓபிஎஸ். அதேபோல, சூளகிரி ஒன்றிய சேர்மன் லாவண்யாவின் கணவரும் தம்பிதுரையின் ஆதரவாளருமான மது (எ) ஹேம்நாத் உள்ளிட்டோரும் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
ஓபிஎஸ் டீமில் பதவிகள்
இந்நிலையில் திடீரென ஹேம்நாத், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் தம்பிதுரையை அண்மையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள், எடப்பாடி பழனிசாமி அணியின் தம்பிதுரையைச் சந்தித்தது கிருஷ்ணகிரி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது ஹேம்நாத்திற்கு ஓபிஎஸ் அணியில் மாவட்ட துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணியில் தம்பிதுரைக்கு பவர்
அதேபோல காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்ற நிர்வாகி, ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தபோது பட்டாசு வெடித்து ஆதரவு தெரிவித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஓபிஎஸ்-க்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கு ஓபிஎஸ் அணியில் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி கேம்
தம்பிதுரைக்கு நெருக்கமான பலருக்கும் அடுத்தடுத்து ஓபிஎஸ் அணியில் முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுவே தம்பிதுரையின் கேம் என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர். டெல்லி போட்டுக் கொடுத்த ரூட் படியே, தம்பிதுரை ஓபிஎஸ் அணியோடு பேசி வருவதாகவும், ஓபிஎஸ் தரப்பும், தம்பிதுரையின் மூவ்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இருபுறமும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனது ஆதரவாளர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரு அணிகளிலும் இடம்பெறும் வகையில் பார்த்துக் கொண்டுள்ளார் தம்பிதுரை. இதன் மூலம் அங்கு, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல, அடுத்தடுத்து சில மாவட்டங்களில் தம்பிதுரை, ஈபிஎஸ் அணியில் இருந்து நிர்வாகிகளை ஓபிஎஸ் அணிக்கு அனுப்பி பதவி பெற்றுத் தருவார் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தினர்.