180 உறுப்பினர்களுக்கு மேல் எதிர்த்து வாக்களித்தால் போதும்.. மசோதா நிறைவேறாது.. ப.சிதம்பரம் பேட்டி!
சென்னை: "தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 185. 180 முதல் 190 பேர் எதிர்த்து வாக்களித்தால் இந்த மசோதா நிறைவேறாது.. தோற்கடிக்கப்படும்" என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்தது. இவை மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அமல்படுத்துவது மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பானவை.

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து தென் மாநிலங்களில் கடும் ஆட்சேபனை இருந்த நிலையில், இதுகுறித்த விவாதம் மக்களவையில் நடந்தது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். திமுக எம்.பிக்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடரின் 2ஆம் நாளான இன்று மக்களவையில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ப.சிதம்பரம், 543 இடங்கள் கொண்ட மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அது அரசியல் சாசன 106வது திருத்தம் அமலுக்கு வந்துவிட்டது. நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, சுமார் 30 மாதங்கள் கழித்து நேற்று அதை அமல்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். எனவே, பெண்களுக்கு ஒதுக்கீடு என்பது எந்தப் பிரச்சனையும் இல்லை.
இப்போது சொல்லப்படும் பெண்களுக்கு ஒதுக்கீடு என்பது வெறும் மாயை மட்டுமே. மக்களவை இடங்களை 543-இலிருந்து 850-ஆக உயர்த்தி, அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்குவதாகக் கூறுகிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால், எல்லா மாநிலங்களுக்கும் இடங்கள் கூடும் என்ற ஒரு புதுக் கரடியை உருவாக்குவதுதான்.
உதாரணமாக, தமிழ்நாட்டுக்கு 39 இடங்களிலிருந்து 58 ஆக உயரும் என்று சொல்கிறார்கள். அரசியல் சாசன திருத்த மசோதாவை மட்டும் பார்த்தால் இது உண்மைதான். ஆனால் இது ஒரு மாயை. அடுத்து வரும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா என்ன சொல்கிறது? மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதுதான். தற்போது 543 இடங்களில் தமிழ்நாட்டுக்கு 39 இடங்கள் உள்ளன. இப்போது எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது தெளிவாக இல்லை.
தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை 39-இலிருந்து முதலில் 58 ஆக உயரும் என்று சொன்னாலும், மறுசீரமைப்புக்குப் பிறகு 46 அல்லது 47 ஆகக் குறையும். ஆந்திராவில் 25-இலிருந்து முதலில் 38 ஆக உயரும், பின்னர் 30 ஆகக் குறையும். உத்தரப் பிரதேசத்தில் 80-இலிருந்து 120 ஆக உயரும், மறுசீரமைப்புக்குப் பிறகு 137 முதல் 140 ஆக மேலும் உயரும்.
பிரதமரும் உள்துறை அமைச்சரும் "எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீதம் இடங்கள் கூடும்" என்று மட்டுமே சொல்கிறார்கள். மறுசீரமைப்புக்குப் பிறகு தென் மாநிலங்களின் பங்கு குறையும் என்பதை மறைக்கிறார்கள். இதைத்தான் நான் பல நாட்களாகச் சொல்லி வருகிறேன். ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். பாதி உண்மையை மட்டுமே அவர்கள் சொல்கிறார்கள். அதிமுக கருத்தை கேட்டால் அமித் ஷா கருத்தை கூறுகிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று எதிர்த்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 180-190 ஆக இருக்கும் என்று தெரிகிறது. இது 190-க்கு மேல் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர். எனவே, இந்த மசோதா தோற்கடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications