கொளுத்தும் வெயிலுக்கு குட்டி பிரேக்.. தமிழகத்தில் நாளை முதல் மழை பெய்யும்! எங்கெல்லாம் தெரியுமா!
சென்னை: தமிழ்நாட்டில் பிப். மாதமே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்ட நிலையில், வரும் நாட்களில் வெப்பம் எந்தளவுக்கு இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் சமயத்திலேயே வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்டது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததைக் காட்டிலும் நல்ல மழையே கொடுத்தது. இதனால் பெரும்பாலான நீர்ப்பிடி பகுதிகள் நிரம்பிவிட்டன.
இருப்பினும், அதன் பின்னர் மாநிலத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

வறண்ட வானிலை
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.. இதற்கிடையே இன்றும் (பிப். 26) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரம் நாளை (பிப். 27) முதல் மார்ச் 1ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

மழை
அதாவது நாளை முதல் மார்ச் 1 வரை தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை. அதேபோல கடந்த 24 மணி நேரத்திலும் மாநிலத்தில் பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம்
கோடைக் காலத்திற்கு முன்பு, இப்போது பிப்ரவரி மாதமே பல இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இது கோடைக் காலத்திற்கு ஒரு முன்னோட்டமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்குப் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதுவரை பதிவு செய்யப்பட்டதில் கடந்த 2016 தான் உலகிலேயே வெப்பமான ஆண்டாக இருந்தது. அதன் பின்னர் லா நினா நிகழ்வு காரணமாகக் கடந்த சில ஆண்டுகளாக வெப்பம் குறைந்திருந்தது. இந்தாண்டு வெப்பம் புதிய உச்சத்தைத் தொடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications