நவம்பரில் மழை அடி வெளுக்கப்போகுது.. டெல்டா வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்! சென்னை நிலவரம் என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருந்தாலும் கடந்த 2-3 நாட்களாக பெரியதாக மழை எங்கும் பெய்யவில்லை. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் மழை வெளுத்து வாங்கும் என்று டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "12 வருடங்களுக்கு பிறகு அக்டோபரில் அதிக மழை பதிவாகியிருக்கிறது. அக்டோபர் மாதம் தமிழகம் சராசரியாக 17 செ.மீ மழையை பெறும். நடப்பாண்டில் 23 செ.மீ மழைப்பொழிவு பதிவு. இது இயல்பைவிட 39% அதிகம். 2013 ஆம் ஆண்டில் 25 செ.மீ மழைக்கு பிறகு தற்போது தான் அக்டோபரில் 23 செ.மீ அளவிற்கு மழை பதிவு.

நவம்பரிலும் அதிக மழை வாய்ப்பு. நவம்பர் மாதம் சராசரியாக தமிழகத்தில் 18 செ.மீ மழை பதிவாகும். இந்தாண்டு 22 செ.மீ முதல் 25 செ.மீ வரை இயல்பிற்கு அதிக மழை வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நவம் 15 முதல் 30 வரையிலான காலக்கட்டத்தில் அடுத்தடுத்து தாழ்வு பகுதி, புயல் சின்னங்கள் உருவாகி பருவமழை தீவிரமடையும். நவம்பர் முதல் பாதியில் பகல் வெப்பம் அதிகரித்தும், இடிமழையும் காணப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், "நேற்று (30-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (31-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு, வடக்கு-வடகிழக்கு திசையில், மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக குஜராத் கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தொடங்கி (அக்.31) முதல் நவ.2 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நவ.3ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.4ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.5 மற்றும் நவ.6ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (31-10-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (01-11-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications