மாணவர்களின் பாடவேளைகளில் மட்டும் திரைப்படங்கள்..சிறார் சினிமா பற்றி அழுத்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை
சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் படங்கள் திரையிட புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
நடப்புக் கல்வி ஆண்டு தொடங்கியது முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாணவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேற்படுத்தும் வகையில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
குழந்தைகள் பார்ப்பதற்கு என தரமான திரைப்படங்கள் உலகெங்கும் வந்துகொண்டிருக்கின்றன. நம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவையெல்லாம் எட்டவேண்டும் என்ற நோக்கில் பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது. கல்வி என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. பாடப் புத்தகங்களை படிப்பதோடு சேர்த்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதும்தான் என்பதை புரிந்து சிறார் திரைப்படங்கள் திரையிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி
அதன் ஒரு பகுதியாக அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார் இதழ்
திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும் எனவும், சிறார் இதழில் பிரசுரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட நிகழ்வுகளில் பங்கேற்பர். இதன் இறுதி நிகழ்வு, மாநில அளவில் ஒரு வாரத்துக்கு நடக்கும். இதில் பங்கேற்கும் மாணவர்களில் இருந்து 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்து மேலும் அறிந்துகொள்ளும் வகையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள் வெளியீடு
இந்த நிலையில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடுவதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, திரைப்படத்துக்கென ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே சிறார் திரைப்படங்களை திரையிட வேண்டும். ஒவ்வொரு திரைப்படம் திரையிடும் முன்பும், பின்பும் அதுகுறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும்.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அதேபோல் எந்தப் படங்களை திரையிடுவது என்பது குறித்து ஒவ்வொரு மாதமும், பள்ளிகளுக்கு கல்வித்துறை விவரம் அனுப்பும். அதன்படி தான் திரைப்படம் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுதித் அனுப்ப வேண்டியது கட்டாயம். பள்ளி அளவில் சிறப்பாக விளங்கும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications