அலுவல் பணிகளை தொடரும் ஓ.பி.எஸ்... ஓய்வெடுக்கச் சொல்லும் குடும்பத்தினர்...!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ். கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், வழக்கமான தனது அலுவல் பணிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட ஓ.பி.எஸ்.ஸை ஒரு மாத காலம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இதேபோல் மன அழுத்தம் ஏற்படாத வகையில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் கேஷுவலாக இருக்குமாறும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தியில், மருத்துவர்களின் அறிவுரைகளுக்கு புன்னகைத்தவாறு தலையசைத்த ஓ.பி.எஸ். எனக் குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில் அவர் எப்படியும் 15 நாட்களாவது ஓய்வில் இருப்பார் என நினைத்திருந்த அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நேற்று முன் தினம் ஆச்சரியத்தை அளித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
தலைமைச் செயலகம் சென்ற அவர் தனது அலுவல் பணிகளை கவனிக்கத் தொடங்கினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நடவடிக்கைகளால் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்தார்களாம். சென்னையில் இருந்து தேனிக்கு வந்து அங்கு ஓ.பி.எஸ்.சை ஓய்வெடுக்குமாறு கூறுகிறார்கள் அவரது குடும்பத்தினர்.
11 வருடங்களில் மிக மோசம்.. இந்தியாவின் 2019-20 ஜிடிபி 4.2% ஆக சரியும்.. புள்ளியியல் அமைச்சகம் ஷாக்!
ஆனால் அவரோ, தனக்கு ஒன்றுமில்லை என்றும், உடல்நலத்துடன் தான் தாம் இருப்பதாகவும் கூறி வருகிறாராம். இருப்பினும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் தனிப்பட்ட முறையில், இந்த தருணத்தில் குறைந்தது 10 நாட்களாவது தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் எடுத்துக் கூறினார்களாம்.
இதனால் அவர் சென்னையில் இருந்து தேனியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று ஒரு வார காலம் தொடர் ஓய்வில் இருப்பார் என அவரது வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.