தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் - துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.
சென்னை: தமிழக சட்டசபையில் 2021-22ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் கடந்த 2ஆம் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்..

தொடர்ந்து, 3 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12 ஆயிரத்து 110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தும் சட்டமசோதாவும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்டமசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
5ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்த நிலையில், கூட்டம் நிறைவடைந்தது.
செவ்வாய்கிழமையன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் இன்றைய தினம் கலைவாணர் அரங்கில் கூடுகிறது. காலை 11 மணிக்கு துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 10வது முறையாகும்.
வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மக்களைக் வரும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும், அது தொடர்பாக நிதித் துறைச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிப்பார். மேலும், சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுவும் கூடி, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்று முடிவெடுக்கும்.
தொடர்ந்து சில நாட்கள் கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. அப்போது இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை நிகழ்த்துவார்.












Click it and Unblock the Notifications