எச்ஐவி பரவலைத் தடுக்க தீவிரப் பிரசாரம் செய்யும் அரசே!.. இப்படி தவறு செய்தால் எப்படி?
Recommended Video
சென்னை: எச்ஐவி எனப்படும் உயிர்கொல்லி நோய் பரவாமல் தடுக்க தீவிர பிரசாரம் செய்யும் அரசு எந்த தவறையும் செய்யாத ஒரு கர்ப்பிணியின் உடலில் எச்ஐவி வைரஸை செலுத்தியது நிச்சயம் மறக்க, மன்னிக்க முடியாத குற்றமாகும்.
எல்லா நோய்களுக்கும் தமிழக அரசு மருத்துவமனையில் உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்கள் பரவாமல் தடுக்கும் யுத்திகளை விளம்பர குறும்படங்களாக டிவி, ரேடியோக்களில் வெளியிடுகிறது.
இதற்கு நல்ல உதாரணம் டெங்கு, பன்றி காய்ச்சல். அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த காய்ச்சல்களுக்கான நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் படங்களாக வரையப்பட்டிருக்கும்.
எய்ட்ஸ் தினம்
இந்த காய்ச்சல்கள் மட்டுமின்றி உயிர்க் கொல்லியான எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கவும் அரசு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், குறும்படங்கள் மூலமாக விளம்பரப்படுத்துகின்றன. எய்ட்ஸ் நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
பயன்பாடுகள்
பாதுகாப்பற்ற உடலுறவு குறித்தும், அதனால் ஏற்படும் நோய் குறித்தும் அதை தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது குறித்தும் எத்தனையோ முறை மக்களை கொண்டு சேர்த்துள்ளன. இதன் மூலம் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், காப்பர் டி ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.
எச்ஐவி பரவல்
இத்தகைய விழிப்புணர்வோடு செயல்பட்ட அரசு இன்று ஒரு கட்டத்தில் சறுக்கிவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிக்கு எச்ஐவி நோய் தொற்று இருக்கும் வைரஸை ஏற்றியது. இதில் அந்த பெண்ணுக்கு எச்ஐவி பரவியது.
கவனம் இல்லை
தற்போது அந்த பெண்ணின் நிலை கேள்விக்குறியாகிவிட்டது. இது முழுக்க முழுக்க அரசு ஊழியர்களின் பொறுப்பற்ற செயலாகும். ஒருவர் ரத்த தானம் செய்தால் அந்த ரத்தத்தை பரிசோதனை செய்யாதது தானம் பெற்ற சிவகாசி மருத்துவமனையின் தவறு. சரி அவர்கள்தான் தவறு செய்து விட்டார்கள், சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களாவது கவனமாக இருந்திருக்க வேண்டாமா.
விளம்பரம்
கர்ப்பிணியின் உடலில் ரத்தத்தை செலுத்துவதற்கு முன்னர் அதை பரிசோதித்திருக்கலாம். அதை விடுத்து ஏனோ தானோவென ரத்தத்தை ஏற்றிவிட்டனர். தேவையற்ற குப்பைகளை சேர்க்காதீர் என விளம்பரம் செய்யும் நகராட்சியே ஒரு சில இடங்களில் குப்பைகளை வாராமல் அப்படியே வைத்து விடுவர்.
எச்ஐவி பாதிப்பு
அது போல் பாதுகாப்பாக இருங்கள் என எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு விருதுநகர் கர்ப்பிணி விவகாரத்தில் அரசே தவறை செய்து விட்டது. விருதுநகர் கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் தூய்மையானவர்கள். ஆனால் அரசு ஊழியர்கள் அவர்களின் தொழிலில் "சுத்தத்தை" கடைப்பிடிக்காததால் இதுபோன்ற அவலம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட அந்த பெண்ணோ, அவரது கணவரோ காரணம் இல்லை, அரசுதான் என்பதை நினைத்தால் இனி அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருவார்களா என்பது சந்தேகமே.
கோரிக்கை
ஏழைகள், நடுத்தர மக்கள் தங்களால் பணம் செலவு செய்து தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலையால் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால் அரசோ இது போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்துவிட்டு சஸ்பெண்ட், பணிநீக்கம், பாதிக்கப்பட்டவருக்கு வேலை என்று கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா. இனியாவது அரசு அதிகாரிகள் பொறுப்போடு செயல்பட வேண்டும். இது போன்ற குற்றங்களை புரிந்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.