’புதுமைப் பெண்’ திட்டம் ஏற்படுத்திய சமூக மாற்றம்! சாதிவாரியாகச் சாதித்த மாணவிகளின் புள்ளிவிவரம்
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் சாதி வாரியாக சாதித்த மாணவிகளின் புள்ளி விவரம்
சென்னை: அடுத்தகட்ட பாயச்சலை அடைந்திருக்கிறது 'புதுமைப் பெண்' திட்டம். இதனால் மேலும் ஏறக்குறைய 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் 1 லட்சத்து 56 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தால் கல்லூரிகளில் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 27% ஆக உயர்ந்துள்ளது. மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்பதால் மாணவிகள் அதிக ஆர்வத்துடன் சேர்ந்து படிக்க முன்வந்துள்ளதையே இந்தப் புள்ளிவிவரம் எடுத்துக் காட்டுகிறது.
6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த அரசுப் பள்ளி மாணவிகள் இதற்குத் தகுதியானவர்களாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு அடிப்படையில் படித்த மாணவிகளையும் அரசு இத்திட்டத்திற்குக் கொண்டுவந்துள்ளது. கடந்த வருடம் செப் 5 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.
அந்தவேகத்திலேயே 'புதுமைப் பெண் 2.ஓ' வை தொடங்கிவைத்துள்ளார் ஸ்டாலின். இதனால் பயன்பெற்ற மாணவிகளைத் தொடர்பு கொண்டோம்.
கள்ளக்குறிச்சியிலுள்ள அரசுக் கலைக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இத்திட்டம் தங்களுக்கு எந்தளவுக்கு பெரும் உதவியாக இருந்தது என்பதைத் தெரிவித்தனர். அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் எந்தவகைகளில் எல்லாம் உதவிக்கரமாக உள்ளது என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

பொறியியல் படிக்கும் சைக்கிள் மெக்கானிக் மகள்:
மிகவும் வறுமையான பின்புலத்தைக் கொண்டவர் விஷாலினி. அவர், "நான் முதலாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிக்கிறேன். நான் சின்ன கிராமத்திலிருந்து இங்கு வந்துபடிக்கிறேன். என் அப்பா சைக்கிள் மெக்கானிக் வேலை பார்த்துவருகிறார். அம்மா, கடந்த 10 வருடங்களா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார்.
ஆனால், இப்போது அவர் வேலைக்குப் போவதில்லை. அப்பாவுக்கும் பழைய மாதிரி சைக்கிள் சர்வீஸ் செய்யும் வேலைகள் வருவதில்லை. மிகவும் வேலைகள் குறைந்துவிட்டன. இந்த வருமானத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்துகிறோம். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவனும் படித்துக் கொண்டிருக்கிறான்.
இப்போது முதல்வர் ஸ்டாலின் வழங்கிய 'புதுமைப் பெண்' திட்டத்தில் வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் வைத்துத்தான் நான் மேற்படிப்பு படித்துவருகிறேன்.
இந்தப் பணத்தை வைத்துத்தான் நோட் மற்றும் புத்தகங்கள் என அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்கிறேன். கூடவே என் ஸ்டெடி மெட்ரீயலை என் தம்பிக்குக் கொடுத்து உதவ முடிகிறது. வேறு சில அரசு தேர்வுகளையும் இந்தத் தொகையைக் கொண்டு நான் எழுதி வருகிறேன். என் வருங்காலத்தைச் சிறப்பாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை இந்த அரசு கொடுத்திருக்கிறது. அதற்காக ஸ்டாலின் அய்யாவுக்கு நன்றி" என்கிறார்.

பொறியியல் படிக்கும் கொத்தனார் மகள்:
மாணவி ஆர்.லதா மகேஸ்வரி, "நான் பொறியியல் படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். மிகமிக சின்ன கிராமத்திலிருந்து வந்து பொறியியல் படிக்கும் முதல் தலைமுறை பெண் நான். அதை இந்தப் புதுமைப் பெண் திட்டம்தான் உருவாக்கிக் கொடுத்துள்ளது. ஏனெனில் அப்பா, கொத்தனார் வேலைதான் செய்கிறார். அதிகம் வருமானம் இல்லாத குடும்பத்திலிருந்து உயர்கல்வி படிக்க வந்துள்ளேன்.
எங்கள் அப்பா தினக்கூலி என்பதால் என் படிப்புக்கான தேவைகளை அவரிடம் கேட்டுப் பெற முடியாது. அவரே அதிக வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்தி வருகிறார். தினக்கூலியின் மகளான நான் இந்தக் கல்லூரிக்கு வந்து படிப்பேன் எனக் கனவிலும் நினைத்ததில்லை. அந்த வசதி வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டம் மூலம் செய்து கொடுத்துள்ளார்.
இதுவரை நான் என் படிப்பு செலவுக்காக வீட்டை எதிர்பார்த்து நின்றதில்லை. சுயமாக என் தேவையைச் செய்து கொள்ள இந்த மாதம் ஆயிரம் ரூபாய் தொகை பெரிய உதவியாக உள்ளது.
என் கல்லூரி படிப்புக்காகப் பாடத் திட்டத்தைச் சமர்ப்பிக்கக் குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவாகிறது. அதற்கு அரசு தரும் பணம் உதவியாக இருக்கிறது" என்கிறார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன்:
கவிதா, "அப்பா நான் அதிகம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் இப்போது அப்பா என்னுடன் இல்லை. நான் நன்றாகப் படிக்கவேண்டும், நல்ல வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அப்பா என் மனதிற்குள் போட்ட விதை அப்படியேதான் இருக்கிறது.
இப்போது பொறியியல் கல்லூரியில் படிக்கிறேன். அதற்கான வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கிய மாதம் ஆயிரம் ரூபாய்தான் நிஜமாக்கியது. அப்பா இருந்திருந்தால் அதிகம் மகிழ்ச்சியடைந்திருப்பார்.
நான் கல்லூரிக்கு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது பெரிய அதிருஷ்டம். ஏனெனில் என் தலைமுறையைத் தாண்டி வந்திருந்தால், என் உயர்கல்வி கனவு நிறைவேறி இருக்காது. அதற்காக நான் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். அவர் என் படிப்புக்கு உதவி செய்திருக்கிறார். நான் நாளை படித்து பெரிய அளவில் சம்பாதிக்கும் போது சிலரது படிப்புக்கு நான் கட்டாயம் உதவி செய்வேன்" என்கிறார் இவர் இரண்டாம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
பி.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறார் இன்னொரு கிராமத்து மாணவி. இவர் என்ன சொல்கிறார்? "நான் பொறியியல் படிப்பதால் அதிகமாக ஆன்லைன் படிப்புகளைச் சார்ந்து பங்கேற்பேன்.

பணத்தைச் சேமித்து ஆன்லைன் வகுப்பு படிக்கிறேன்:
ஆன்லைன் சார்ந்து படிப்பதால் எனது தொலைப்பேசிக்கு அதிக டேட்டா செலவு ஆகும். அதற்கான தொகைக்கு நான் இந்தப் புதுமைப் பெண் திட்டம் தரும் மாதம் ஆயிரம் ரூபாயைத்தான் நம்பி இருக்கிறேன். அதற்கு அதிக அளவில் இந்தப் பணம் உதவிக்கரமாக உள்ளது.
இந்த சின்ன சின்ன பணத்தேவைக்காக நான் குடும்பத்தை நம்பி இருக்க முடியாது. இந்தத் தொகைக்கே அவர்கள் பெரியளவில் கஷ்டப்படுவார்கள். அதைப் பார்க்கவே சங்கடமாக இருக்கும். ஆகவே பலமுறை நான் கேட்பதைத் தவிர்த்துவிடுவேன்.
ஆனால் இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்கத் தொடங்கியதற்குப் பிறகு நான் சுயமாகச் செயல்படுகிறேன். இப்படி முதல்வர் ஸ்டாலின் வழங்கி வரும் ஆயிரம் ரூபாய் என்னைப் பொறுத்தளவில் பலவழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது" என்கிறார்.
இன்னொரு மாணவி விவசாய குடும்பத்திலிருந்து பொறியியல் படிக்க வந்துள்ளார். காய்கறி விவசாயியான அவரது தந்தைக்கு அதிக வருமானம் இல்லை. ஆகவே இந்தத் தொகைதான் தனக்கான ஜீவாதாரம் என்கிறார். ஸ்டாலின் வழங்கி வரும் 1000 ரூபாயை வைத்துத்தான் லைப்ரரிங் கிளாஸ் போய் வருகிறார் இவர். இந்தப் படிப்புக்கே 5 ஆயிரம் ரூபாய் வருகிறதாம். அதற்காக மாதம் வரும் உதவித் தொகையைச் சேமித்து அந்தப் படிப்பை மேற்கொண்டுவருவதாகக் கூறுகிறார்.

எங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார் ஸ்டாலின்:
இன்னொரு மாணவி, "மாதம் மாதம் ஆயிரம் என்பது பெரிய உதவி. ஏதோ ஒருமாதம் மட்டும் என்றால் அது போதுமானதாக இருக்காது. ஆகவே இந்தத் திட்டம் சிறப்பாக எனக்குப் பலனளிக்கிறது. பாடப் புத்தகங்களின் விலை பெரிய அளவில் உயர்ந்துள்ளது. அதைச் சமாளிக்க இந்தத் தொகைதான் பெரிய அளவில் உதவி செய்கிறது.
என்னைப் பொறுத்தளவில் முதல்வர் ஸ்டாலினை என் குடும்பத்தில் ஒருவராகத்தான் பார்க்கிறேன். ஏனென்றால் அவர்தான் என்னை உயர்கல்வி பெறும் அளவுக்கு உயர்த்திக் கொண்டுவந்துள்ளார் " என்கிறார்.
கனிமொழி என்பவர் அரசுக் கலைக்கல்லூரியில் படித்துவருகிறார். அதற்கு இந்தப் புதுமைப்பெண் உதவித் தொகைதான் காரணம் என்கிறார்.
இன்னொரு மாணவி வீரசோழபுரம் கிராமத்திலிருந்து வந்து உயர்கல்வி கற்கிறார். ஒன்று முதல் 8ஆவது வரை அரசுப் பள்ளியில்தான் படித்துள்ளார். இப்போது மெரீட்டில் கலைக்கல்லூரியில் இடம் கிடைத்துப் படித்துவருகிறார். இவரைப்போலவே இன்னொரு மாணவி. அவரது தந்தை ஓட்டுநர். அவர் உயர்கல்வி பெற உறுதுணையாக இருந்தது இந்த ஆயிரம் ரூபாய் திட்டம் என்கிறார்.
இவரைத் தொடர்ந்து காவியா. இவர் கச்சராபுரத்தில் இருந்துவந்து கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் படிக்கிறார். இவரது கனவு ஐபிஎஸ் ஆவதுதான் என்கிறார். இவரும் முதல்வர் ஸ்டாலின் தங்களது வீட்டில் ஒரு சகோதரரைப்போலத்தான் என்கிறார்.
'புதுமைப் பெண்' திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடங்கவிழா, அதாவது 'புதுமைப் பெண் 2.ஓ'வை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் உள்ள இந்துக் கல்லூரியில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8 ஆம் தேதி தொடங்கிவைத்தார். இதன் மூலம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 347 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்ற பாரதிதாசன்:
இத்திட்டம் குறித்து விளக்கம் அளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஒருநாடு செழித்து தன்னிறைவோடு நிகழவேண்டும். அதற்கு நாட்டில் உள்ள மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக இருப்பது அவசியம். முக்கியமாகப் பெண்களுக்கு மிகமிக அவசியம். கல்வியைத்தான் அழியாச் செல்வம் என்று சொன்னார் வான்புகழ் கொண்ட வள்ளுவர். கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் என்று சொன்னார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அத்தகைய கல்விச் செல்வத்தை அனைவரும் பெறும்படி செய்யவேண்டும் என்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டதுதான் திராவிட இயக்கம்.
மதரீதியாக, சாதிரீதியாக, வர்த்தகரீதியாக , இனரீதியாக , பால் ரீதியாக வேறுபாடுகளும் தீண்டாமைகளும் கற்பிக்கப்பட்டிருந்த இந்த நிலத்தில் அனைவரும் சமம் என எடுத்துக் கூற உருவானதுதான் திராவிட இயக்கம். அப்படிப்பட்ட திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாக இருக்கக் கூடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரால் தொடங்கப்பட்டதுதான் இந்தப் புதுமைப் பெண் திட்டம்.

10 ரூபாய்க்கு விற்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம்:
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பிறந்த போது மிகவும் வருமையிலிருந்தார். அவரை வளர்க்க அவரது தாய் பெரிய சிரமங்களை அனுபவித்தார். ஆகவே அந்தப் பிள்ளையை 10 ரூபாய்க்கு விற்றுவிட்டார். அப்படி 10ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணால்தான் இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்லாயிரக் கணக்கான பிள்ளைகள் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெறுகிறார்கள்.
முதற்கட்டமாக இத்திட்டம் வடசென்னை பாரதி மகளிர் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 56 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இதற்காகக் கடந்த 5 மாதங்களில் 69 கோடியே 44 லட்சம் ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப வறுமையால் தனது மேற்படிப்பை மேற்கொள்ள முடியாமல் தவித்த 12 ஆயிரம் மாணவிகள் இந்தத் திட்டத்தால் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் குடும்ப வறுமையால் உயர்கல்வியைத் தொடரமுடியாமல் கைவிட்ட 10 ஆயிரத்து 146 மாணவிகள் இத்திட்டம் வந்தபிறகு உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
1 லட்சத்து 56 ஆயிரத்து 11 பேர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் மாணவிகள் மட்டும் 48 ஆயிரத்து 660 பேர். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சுமார் 50 ஆயிரத்து 550 பேர். பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் 44 ஆயிரத்து 880 பேர். பழங்குடி மாணவிகள் 1900 பேர் எனப் பலதரப்பினர்களும் பயன்பெற்றுள்ளனர்" என்றார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications